பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து.. ஆந்திராவில் குப்பம் விமான நிலையப் பணிகள் தீவிரம்!!
சென்னை பரந்தூர் விமான நிலைய திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்துள்ள அதே நேரத்தில், தமிழக எல்லையில் மற்றுமோர் விமான நிலையம் அமைக்கும் வேலையில் தீவிரம் காட்டிவருகிறது ஆந்திர அரசு. குப்பம் தொகுதியானது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொந்தத் தொகுதி என்பதால், அத்தொகுதியை முன்னேற்றும் வகையில், ‘ஸ்வர்ண குப்பம் விஷன் 2029’ திட்டத்தை அறிவித்திருந்தார் முதல்வர் சந்திரபாபு நாயுடு.
குப்பம் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காத பெங்களூரு விமான நிலைய நிர்வாகம், தமிழகத்தின் ஓசூர் விமான நிலையத்துக்கு தடையாக இருப்பதாக சட்டமன்றத்தில் வேப்பனஹள்ளி எம்எல்ஏ சீனிவாசன் குற்றம்சாட்டியிருந்தார். அதற்கு பதிலளித்த தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா ஆதாரங்களற்ற குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல முடியாது எனத் தெரிவித்தார். இந்த சூழலில்தான் குப்பம் விமான நிலையத்துக்கான அனுமதியை பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திடம் இருந்து ஆந்திர அரசுப் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
இதனை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக செய்தியாளர்களிடம் பேசிய குப்பம் தொகுதி திட்ட இயக்குநர் விகாஸ் மர்மட், விமான நிலையத்துக்கு 10 சதவீத நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட வேண்டி உள்ளதாக தெரிவித்தார். மேலும் நில உரிமையாளர்களுக்கு இதுவரை 90 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதே இலக்கு என்றும் குப்பம் தொகுதி திட்ட இயக்குநர் விகாஸ் மர்மட் தெரிவித்தார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொந்த தொகுதியில் 1,788 ஏக்கரில் அமைய உள்ள இந்த விமான நிலையத்துக்கு இதுவரை ஆயிரத்து 300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. பெங்களூரு - சென்னை விரைவுச் சாலையிலிருந்து வெறும் 20 கிலோ மீட்டர் தொலைவில் இந்த விமான நிலையம் அமைய இருப்பதால், இந்தத் திட்டம் மூன்று மாநிலங்களின் வர்த்தகத்திலும் பெரும் தாக்கம் ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

