‘கடவுள் உயிர் கொடுப்பார்’ சடலத்துடன் 3 நாட்கள் இருந்த குடும்பம்
இறந்த பெண்ணின் உடலை மூன்று நாள்கள் வீட்டில் வைத்து, அவர் மீண்டும் உயிர் பெறுவார் என நம்பி குடும்பத்தினர் வாழ்ந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரம் மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் ஜங்கரெட்டிகுடம் என்ற ஊரில்தான் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவது என்னவென்றால், உயிரிழந்தவரின் பெயர் அருணா ஜோதி (41). இவர் சந்தேகத்துக்கு இடமான முறையில் தன்னுடைய குடியிருப்பில் மரணமடைந்துள்ளார். ஆனால், அருணா மரணமடைந்த விஷயத்தை வெளியே சொல்லாமல் அவரின் அம்மாவும், தம்பியும் சடலத்தை குடியிருப்பிலேயே வைத்திருந்துள்ளனர்.
ஆனால் துர்நாற்றம் வீசத் தொடங்கியதை அடுத்து அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து அருணாவின் குடியிருப்புக்குள் புகுந்த போலீஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அருணாவின் உடலை பக்கத்தில் வைத்துக்கொண்டு தம்பி டி.ரவிசந்திரா (39) மத்திய உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்திருக்கிறார். இதனையடுத்து அருணாவின் தாயாரான மஞ்சுலா தேவி (70) தன்னுடைய வழக்கமான பணிகளை வீட்டில் சர்வ சாதாரணமாக செய்து வந்துள்ளார்.இந்தக் காட்சிகளை கண்ட போலீஸார் குழப்பம் அடைந்தனர்.
பின்பு, மஞ்சுலா தேவியிடம் உங்கள் மகள் இறந்துவிட்டார் என கூறியுள்ளனர். அதற்கு அவர் "கடவுள்தான் அவளுக்கு வாழ்வை கொடுத்தார், அவள் இறந்துவிட்டால் மீண்டும் கடவுள் அருள் புரிந்து அருணாவுக்கு உயிர் கொடுப்பார்" என தெரிவித்துள்ளார். அருணாவின் தம்பி "அக்கா தூங்கி்க் கொண்டு இருக்கிறார்" என கூறியுள்ளார். இதனையடுத்து போலீஸார் வலுக்கட்டாயமாக அருணாவின் பிரேதத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கூறிய போலீஸார் " அருணா இறந்து மூன்று நாள்கள் கடந்துவிட்டது. உயிரிழந்ததற்கான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால்தான் தெரியும். அக்கம்பக்கத்தில் விசாரித்ததில் அருணா குடும்பம் பணப் பிரச்சனையில் இருந்ததாக தெரிகிறது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் அவர்கள் எப்போதும் யாருடனும் பழகாமலேயே இருந்துள்ளனர். பல மாதங்களாக அவர்கள் குடியிருப்பின் வாடகை கூட கொடுக்க முடியாமல் தவித்துள்ளனர். எனவே அருணா தற்கொலை செய்துக்கொண்டாரா இல்லை பசியால் இறந்தாரா என்பது தெரியவில்லை" என்றனர்.