ஆன்லைன் கிப்ஃட் கார்டு மோசடி | நடவடிக்கை எடுக்க ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வேண்டுகோள்!
உலகம் முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதிலும் ஆன்லைன் உலகைச் சொல்லவே வேண்டும். குற்றங்களுக்குப் பஞ்சம் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. குற்றம் செய்பவர்கள் புதுப்புது யுக்தியினை கையாண்டு மக்களை ஏமாற்றி பணம் பறித்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது பிரபல ஆன்லைன் கிப்ஃப் கார்டுகள் மூலம் மக்களை ஏமாற்றிப் பணம் பறித்து வருகின்றனர். மறுபுறம், அமேசான் பயனர்களின் காலாவதியான கிப்ஃட் கார்டுகள் வாயிலாக மோசடி நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் கருத்து தெரிவித்துள்ளார். தன் எக்ஸ் தளப்பக்கத்தில் அவர், “அமேசான் கிப்ஃட் கார்டு தொடர்பாக பயனர்களால் கொடுக்கப்பட்ட சில புகார்கள் எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு உள்ளன. அமேசான் வாடிக்கையாளர்களின் காலாவதியான கிப்ஃட் கார்டுகள் வாயிலாக, கஷ்டப்பட்டு சம்பாதித்த அவர்களின் பணம் முடக்கப்படுகிறது. சமீபத்தில் எனது அலுவலகத்தில்கூட இத்தகைய நிலை ஏற்பட்டது.
29 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் ஆன்லைன் வணிக நிறுவனத்தின் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பிட்ட காலம் பயன்படுத்தாமல் உள்ள அமேசான் கணக்கு, 'டார்மெண்ட்' என்ற பெயரில் செயலிழந்து விடுவதால் வாடிக்கையாளர்களின் பணம், திரும்ப எடுக்க முடியாத அளவுக்கு முடக்கப்பட்டு விடுகிறது. இதற்கு தீர்வு காண்பதற்கு எதுவும் இல்லாத நிலை உள்ளது.
அமேசானில் இந்தியாவில் மட்டும் 100 கோடிக்கும் அதிகமான கிப்ஃட் கார்டுகள் வாங்கப்பட்டுள்ளன. ப்ரீபெய்டு கட்டணம் குறித்த ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களின்படி, குறைந்தபட்சம் ஒரு வருடம் செல்லுபடியாக வேண்டும். முன் அறிவிப்புக்குப் பிறகு மட்டுமே கணக்கு முடக்கப்பட வேண்டும். மீதமுள்ள தொகையை பயனர்களின் வங்கிக் கணக்கிற்கு மாற்ற வேண்டும். நுகர்வோரைப் பாதுகாக்க வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயத்தை உறுதிசெய்ய ஆன்லைன் வணிக நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.