வரி கொடுப்பது தெற்கு, வாழ்வது வடக்கா? கொந்தளித்த சந்திரபாபு நாயுடு!
தென் மாநிலங்களின் வரியை மத்திய அரசு வடமாநிலங்களுக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்வதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.
ஆந்திர சட்டப்பேரவைக் கூட்டத்தில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது சந்திரபாபு நாயுடு பேசினார். அப்போது, ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவை தனி மாநிலமாக பிரித்த போது மத்திய அரசு அளித்த வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை என்று கேள்வி எழுப்பினார். மத்திய அரசுக்கு அதிகம் வரி செலுத்துவது தென் மாநிலங்கள் தான் என்று கூறிய அவர், ஆனால் அந்த வரிப்பணம் முழுவதும் வடமாநிலங்களின் வளர்ச்சிக்கே மத்திய அரசு ஒதுக்குவதாக குற்றம்சாட்டினார். அத்துடன் தங்கள் மாநிலத்தில் இருந்து பெறப்படும் வரியை ஏன்? தங்களுக்கு ஒதுக்குவதில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், அனைத்து வரியுமே மக்கள் செலுத்துவது தான், எனவே அதை மத்திய அரசின் நிதி, மாநில அரசின் நிதி என்று பார்க்கக் கூடாது என்றார். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தரமுடியாது என்பதை ஏற்க இயலாது என்றும், ஆந்திராவும் இந்தியாவின் ஒரு பகுதி தானே என்று அவர் ஆதங்கம் தெரிவித்தார். மேலும் தெலுங்கானாவை தனி மாநிலமாக பிரித்த மத்திய அரசு, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தராதது ஏன்? என்று வினா எழுப்பினார்.