பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் சென்னை வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக - பாஜக இடையேயான முதற்கட்ட பேச்சுவார்த்தை கடந்த 14-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது சென்னை வந்த பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோருடன் சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா இன்று சென்னை வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போது பாஜக- அதிமுக இடையிலான கூட்டணி இறுதி செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகியிருந்தன. இந்நிலையில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் சென்னை வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இருந்த அமித் ஷா தற்போது அங்கிருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். இன்று காலை சென்னை வருவதாக இருந்த நிலையில் பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு அமித் ஷா டெல்லிக்கு சென்றுவிட்டார். அமித் ஷாவின் வருகை திடீரென ரத்து செய்யப்பட்டது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.