குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பரப்பிவரும் பொய்ச் செய்திகள் நாட்டில் அராஜகத்துக்கு வழிவகுத்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றஞ்சாட்டியுள்ளார்.
குஜராத் மாநிலம் காந்தி நகரில், பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தபோது செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் இஸ்லாமியர்களின் குடியுரிமையை பறிப்பது தொடர்பான ஒரு பிரிவையாவது ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் இடதுசாரிகளால் காண்பிக்க முடியுமா? என சவால் விடுத்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, நாட்டின் பாதுகாப்பிற்குத்தான் முன்னுரிமை அளித்து வருவதாக அமித் ஷா கூறினார்.
பாகிஸ்தான் மீது துல்லியத் தாக்குதல் நடத்திய பின்னர், அதுபோன்ற நடவடிக்கையில் இறங்கிய நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இஸ்ரேலை அடுத்து இந்தியா மூன்றாவது இடம்பிடித்துள்ளது என்று அவர் பெருமிதம் தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் பேச வேறு பிரச்னைகள் எதுவும் இல்லாததால், குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக அவர்கள் தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும் அமித் ஷா விமர்சித்தார்.