"இது ஓர் ஆரம்பம் மட்டுமே!" - மேற்கு வங்கத்தில் 'விக்கெட்'டுகளை வீழ்த்திய அமித் ஷா பேச்சு

"இது ஓர் ஆரம்பம் மட்டுமே!" - மேற்கு வங்கத்தில் 'விக்கெட்'டுகளை வீழ்த்திய அமித் ஷா பேச்சு
"இது ஓர் ஆரம்பம் மட்டுமே!" - மேற்கு வங்கத்தில் 'விக்கெட்'டுகளை வீழ்த்திய அமித் ஷா பேச்சு

"நான் பார்க்கும் சுனாமியை மம்தா பானர்ஜி கற்பனை செய்திருக்கமாட்டார். இது ஓர் ஆரம்பம் மட்டுமே" என்று மேற்கு வங்கத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மேற்கு வங்கத்துக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ளார். இவர் தலைமையில் மிட்னாப்பூரில் பிரமாண்ட பேரணி பாஜக சார்பில் இன்று நடைபெற்றது. இந்தப் பேரணியின்போது இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களும், ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏக்களும் பாஜகவில் இணைந்தனர். அத்துடன், திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த ஒரு எம்,பி மற்றும் ஒரு முன்னாள் எம்.பியும் பாஜகவில் இணைந்தனர். மேலும் மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் பலரும் பாஜகவில் இணைந்தனர்.

திரிணாமுல் கட்சியில் தலைவர்கள் சிலர் அதிருப்தியை வெளிப்படுத்தி கட்சியில் இருந்து வெளியேறும் நிகழ்வுகள் நடந்த வண்ணம் இருந்த நிலையில், இந்த இணைப்பு நடந்துள்ளது. 

அமித் ஷா இன்று பேரணியில் பேசும்போது, “மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி நடத்தி வரும், காட்டாட்சியை மக்கள் வெறுக்க தொடங்கிவிட்டனர். அவர்கள் ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீரழிந்துவிட்டது. ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டு வருகிறது.

பாஜக, மற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்களை அழைத்துச் செல்கிறது என்று மம்தா தீதி கூறுகிறார். காங்கிரஸில் மம்தா இருந்த நாட்களை நான் அவருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். உங்கள் பூர்வீகம் காங்கிரஸ்தான். நீங்கள் காங்கிரஸை விட்டு வெளியேறி டி.எம்.சி.யை உருவாக்கியபோது நீங்களும் இதையே செய்தீர்கள்.

மேற்கு வங்க மக்கள் வரும்போது மேற்கு வங்க மாநிலத்தை மாற்ற பாஜக வருகிறது. நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? இது ஒரு ஆரம்பம் மட்டுமே. மேற்கு வங்க மக்களுக்கு மத்திய அரசு சலுகைகள் கிடைக்கவில்லை.

நான் மேற்கு வங்க இளைஞர்களிடம் கேட்க விரும்புகிறேன்... உங்கள் தவறு என்ன? இங்கே ஏன் வளர்ச்சி இல்லை? இங்கே விவசாயிகளிடம் நான் கேட்க விரும்புகிறேன்... பிரதமர் மோடியால் அனுப்பப்படும் ஆண்டுதோறும் ரூ.6,000 உதவித்தொகையை ஏன் நீங்கள் பெறவில்லை? மோடி ஜி ஏழைகளுக்காக அனுப்பிய உணவு தானியங்கள், சலுகைகளை திரிணாமுல் காங்கிரஸ் பறித்துக்கொள்கிறது.

நீங்கள் காங்கிரஸுக்கு மூன்று தசாப்தங்களையும், கம்யூனிஸ்டுகளுக்கு 27 ஆண்டுகளையும், மம்தா தீதிக்கு 10 ஆண்டுகளையும் கொடுத்தீர்கள். பாரதிய ஜனதாவுக்கு 5 ஆண்டுகள் கொடுங்கள். நாங்கள் பெங்காலை சோனார் பங்களாவை உருவாக்குவோம். 

மேற்கு வங்கத்தின் அனைத்து பிரச்னைகளையும் மோடி ஜி தலைமையில் பாஜக அரசால் தீர்க்க முடியும். மற்ற கட்சிகளிலிருந்து வந்த சுவேந்து ஆதிகாரி மற்றும் அவரது சகாக்களைத் தவிர, பாஜக முழு மனதுடன் வரவேற்கிறது. மம்தா பானர்ஜி குடும்ப அரசியல் நடத்தி வருகிறார். மம்தா தனது மருமகனுக்கும் நெருங்கிய நண்பர்களுக்கும் மட்டுமே கொடுக்க விரும்புகிறார். அவர் ஏழைகளுக்காக எதுவும் செய்யவில்லை.

இதனால் மக்கள் மட்டுமின்றி திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகிகளும் வெறுத்து போயுள்ளனர். இதனால்தான் அவர்கள் கட்சி மாறுகிறார்கள். தேர்தலின்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் மம்தா மட்டுமே இருப்பார். மற்ற அனைவரும் விலகி விடுவார்கள். நான் பார்க்கும் சுனாமியை மம்தா பானர்ஜி கற்பனை செய்திருக்கமாட்டார். மக்களவைத் தேர்தலில் பாஜக தனது பலத்தை உணர்த்தியுள்ளது. நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் கட்சி 200-க்கும் மேற்பட்ட இடங்களை வெல்லும்" என்று ஆவேசமாக பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com