கேரளாவில் பாதயாத்திரையை தொடங்கி வைத்தார் அமித்ஷா: இன்று யோகி பங்கேற்கிறார்
பாரதிய ஜனதா கட்சி தலைவர் அமித்ஷா கேரளாவில் 15 நாள் பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்றைய யாத்திரையில் கலந்து கொள்கிறார்.
கேரளாவில், முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. கேரளாவில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் மார்க்சிஸ்ட் கட்சியினருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த மோதல் சில நேரங்களில் வன்முறையாக மாறிவிடும். மோதலை தொடர்ந்து இரண்டு தரப்பினரை சேர்ந்த பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த மோதல் நீண்ட காலமாக கேரளாவில் நீடித்து வருகிறது.
இந்த நிலையில், பா.ஜ.க., மற்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை சேர்ந்தவர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து மக்கள் யாத்திரை என்ற பெயரில் 15 நாட்கள் பிரச்சார யாத்திரையை நடத்த பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்தது. இந்த யாத்திரை முதலமைச்சர் பினராயி விஜயனின் சொந்த மாவட்டமான கன்னூரில் உள்ள பையனூரில் இருந்து நேற்று தொடங்கியது. இந்த யாத்திரையை அமித்ஷா தொடங்கி வைத்தார். 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடைபெற்ற பாதயாத்திரையில் கட்சித் தொண்டர்களுடன் அமித்ஷா நடந்து சென்றார்.
யாத்திரைய தொடங்கி வைத்து பையனூரில் பேசிய அவர், “கேரளாவில் 120 பாரதிய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 80 பேர் முதலமைச்சரின் சொந்த மாவட்டமான கன்னூரில் கொல்லப்பட்டுள்ளனர். கொலையாளிகள் யார் என முதல்வர் தெரிவிக்காவிட்டால் இக்கொலைகளுக்கு அவரே பொறுப்பு” என்று தெரிவித்தார்.
15 நாட்கள் நடைபெறவுள்ள இந்த யாத்திரை இறுதியில் தலைநகர் திருவனந்தபுரத்தில் முடிவடைகிறது. இந்த யாத்திரையில் பா.ஜ.க. மத்திய அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் மற்றும் 5 மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்றைய யாத்திரையில் கலந்து கொள்கிறார்.