கேரளா மற்றும் தமிழகத்தில் பா.ஜ.க-வை பலப்படுத்தும் நோக்கில் அமித் ஷா செப்டம்பர் மற்றும் அக்டோபர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் காலூன்றி விட்ட பாஜக, தமிழகம் மற்றும் கேரளாவில் போதிய அளவு பிரபலமாகவில்லை என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த நிலையை மாற்றும் நோக்கில் அமித்ஷா பல்வேறு திட்டங்களை தீட்டி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் தமிழகம் வருவதாக பலமுறை அறிவிக்கப்பட்டும், அந்த திட்டம் பல்வேறு காரணங்களால் ரத்தானது.
இந்நிலையில் கேரளாவில், பா.ஜ.க-வை வேரூன்ற செய்யும் வகையில், அக்கட்சியின் சார்பில், செப்டம்பர் 7ம்தேதி முதல் 23ம்தேதி வரை, பாத யாத்திரை நடைபெற உள்ளது. அதில், அக்கட்சியின் தேசிய தலைவர், அமித் ஷா பங்கேற்கிறார். இந்நிலையில், கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியின் வன்முறை போக்கை கண்டித்து, மாநிலம் தழுவிய அளவில், பாத யாத்திரை நடத்த பா.ஜ.க முடிவு செய்துள்ளது.
இதனைத்தொடர்ந்து வரும் அக்டோபர் மாதம் அமித்ஷா தமிழகம் வருவார் என தகவல் வெளியாகி உள்ளது. கோவை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளுக்கு அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

