'அதானி குழும சர்ச்சையில் பாஜக எதையும் மறைக்கவில்லை' - மௌனம் கலைத்த அமித் ஷா

'அதானி குழும சர்ச்சையில் பாஜக எதையும் மறைக்கவில்லை' - மௌனம் கலைத்த அமித் ஷா
'அதானி குழும சர்ச்சையில் பாஜக எதையும் மறைக்கவில்லை' - மௌனம் கலைத்த அமித் ஷா

அதானி குழும சர்ச்சையில் பாரதிய ஜனதா கட்சி எதையும் மறைக்கவில்லை என உள்துறை அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா வலியுறுத்தியுள்ளார். இந்த சர்ச்சையில் பாரதிய ஜனதா கட்சி அச்சப்படக்கூடிய விஷயம் ஏதுமில்லை என அவர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.

மேலும், அதானி சர்ச்சை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அது குறித்து மத்திய அமைச்சரான தான் தற்போது பேசுவது சரியாக இருக்காது என அமித் ஷா கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் தெரிவித்தார்.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் “அதானி குழும விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை” என வலியுறுத்தி பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதியில் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோரின் உரைகளில் பல பகுதிகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டு, சர்ச்சை தொடர்ந்து வருகிறது. இப்படியான நிலையில்தான், அமித்ஷா செய்தி நிறுவனமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், “பாஜக எதையும் மறைக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.

அப்பேட்டியில் மேலும் அவர், “அடுத்த வருட மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு போட்டியே இல்லை. இந்த வருடம் நடைபெற உள்ள ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கர்நாடகா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநில சட்டசபை தேர்தல்களிலும் பாஜக வெற்றி பெறும்” என்று கூறியுள்ளார்.

9 மாநிலங்களுக்கு இந்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நாளை திரிபுரா மாநிலத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வருடத்தின் முதல் தேர்தல் அறிவிப்பில் நாகாலாந்து, மேகாலயா மற்றும் திரிபுரா மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி நேற்று முடிவடைந்த நிலையில், இன்று அமித் ஷாவின் பேட்டி ஒளிபரப்பப்பட்டுள்ளது. அதில்தான் அவர் இக்கருத்துகளை தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com