அலுமினிய பாத்திரம்போதும்; படகு எதற்கு? - கேரளாவில் மாஸ் காட்டிய மணமக்கள்!
கேரளாவில் அலுமினிய பாத்திரத்தில் பயணம் செய்து திருமண மண்டபத்தை தம்பதிகள் அடைந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
'கடவுளின் தேசம்' என்று அழைக்கப்படும் கேரளாவில் கன மழை புரட்டிப்போட்டுக்கொண்டிருக்கிறது. நிலச்சரிவு, வெள்ளம் என அம்மக்களை போட்டு படாத பாடு படுத்திக்கொண்டிருக்கிறது பருவ மழை. இந்நிலையில், ஆலப்புழாவில் திருமணம் செய்யவிருந்த மணமகனும் மணமகளும் மண்டபத்திற்கு செல்ல முடியாமல் தவித்தனர். வெள்ளம் சூழந்ததால் திருமண மண்டபத்துக்கு அவர்களால் செல்ல முடியவில்லை.
சுகாதாரப்பணியாளர்களான அவர்கள் இருவரும் சமயோஜிதமாக முடிவெடுத்து திருமணத்துக்காக வைத்திருந்த அலுமினிய சமையல் பாத்திரத்தை ஒரு படகு போல மாற்றி அதில் அமர்ந்து பயணம் செய்துள்ளனர். அலுமினிய பாத்திரத்தின் உதவியுடன் வெள்ளத்தை கடந்து சென்ற அவர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருமண மண்டபத்தை அவர்கள் அடைந்ததும் மண்டபமும் வெள்ளத்தால் சூழ்ந்திருந்தது. இதனால் குறைந்த உறவினர்கள் புடைசூழ அவர்களின் திருமணம் அரங்கேறியது.