மக்களவை தேர்தலில் மின்னணு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்குச் சீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.
வாக்குச்சீட்டு முறையில் சரிபார்ப்பு பணிகளை நேரடியாக உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் என்றும் ஆனால் மின்னணு இயந்திரங்களில் இது சாத்தியமல்ல என்றும் மாயாவதி குறிப்பிட்டுள்ளார். ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டி வாக்குச் சீட்டுகளையே அவசியம் பயன்படுத்தவேண்டும் என மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, பிரிட்டனை சேர்ந்த இந்திய பத்திரிகையாளர் சங்கம் சார்பில் லண்டனில் நிகழ்ச்சி ஒன்று நேற்று நடைபெற்றது. இதில் அமெரிக்காவைச் சேர்ந்த சைபர் நிபுணரான சையது சுஜா ஸ்கைப் மூலம் உரையாற்றினார். அப்போது, 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டியிருந்தார். மேலும் தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ், ஈவிஎம் இயந்திரங்களை ஹேக் செய்ய உதவியது எனவும் இந்தச் செய்தியை வெளியிட ஒப்புக் கொண்ட கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டார் எனவும் புகார் தெரிவித்தார்.
சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இயந்திரங்களை ஹேக் செய்வதற்காக தன்னை அணுகின என்றும், ஈவிஎம் இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டதால் காங்கிரஸ் 201 இடங்களில் தோற்றது எனவும் குறிப்பிட்டார்.
இதைத்தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய எந்த வாய்ப்பு இல்லை என தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது.