அச்சுறுத்தல் இருந்தும் அனுமதித்தது ஏன்? அமர்நாத் படுகொலை பற்றி யெச்சூரி கேள்வி
அமர்நாத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரித்திருந்த போதும் யாத்திரைக்கு அனுமதி அளித்தது ஏன் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீத்தாராம் யெச்சூரி கேள்வி எழுப்பியுள்ளார்.
அமர்நாத்தில் யாத்ரீகர்கள் ஏழு பேர் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்துகாஷ்மீர் மாநிலத்தின் பாதுகாப்பு சூழலை ராணுவ தளபதி பிபின் ராவத் ஆய்வு செய்தார். ஸ்ரீநகரில் உள்ள ராணுவ முகாமுக்கு சென்ற அவரிடம் அதிகாரிகள் அங்குள்ள நிலவரங்களை எடுத்துரைத்தனர். இதைத் தொடர்ந்து மாநில காவல் துறை ஆணையரையும் சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளார். அமர்நாத் யாத்ரீகர்கள் மீதான தாக்குதலுக்கு இலங்கை, நேபாளம், பூடான் ஆகிய அண்டை நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் பயங்கரவாத தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக உளவுத் துறை ஏற்கனவே எச்சரித்திருந்த போதும் யாத்திரைக்கு அனுமதி வழங்கியது எப்படி என மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு மத்திய அரசு பதிலளித்தே தீர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.