புஷ்பா 2 விவகாரம் | அல்லு அர்ஜூன் அதிரடி கைது - 14 நாட்கள் சிறை! - பின்னணி இதுதான்!
சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிச 5ம் தேதி வெளியான புஷ்பா 2 திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பைப் பெற்று தற்போது வரை ரூ.1000 கோடிக்கு அதிகமாக வசூல் செய்துள்ளது. இத்திரைப்பட வெளியான டிச 5 அன்று ஐதராபாத்தில் சிக்கடப்பள்ளியில் உள்ள சந்தியா திரையரங்கில் அதிகாலையில் புஷ்பா-2 பிரீமியர் காட்சியைக் காண குடும்பத்துடன் சென்ற 35 வயதான ரேவதி என்ற பெண் கூட்டத்தில் சிக்கி மயங்கி விழுந்தார். பின்னர், அவர் உயிரிழந்தார் என்ற தகவல் வெளியானது.
இதனையடுத்து, நடிகர் அல்லு அர்ஜுன் மீதும், அதிகளவிலான கூட்டத்தை ஏற்பாடு செய்த சந்தியா திரையரங்கு மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வழங்குதாக அல்லு அர்ஜுன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில்தான், பெண் உயிரிழந்தது தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜூனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தொடர்ந்து, காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததற்காக, திரையரங்க நிர்வாகிகள் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அல்லு அர்ஜூன் நீதிமன்றத்தை நாடி உள்ளார். அந்த மனு இன்னும் விசாரணைக்கு வரவில்லை.
இந்நிலையில்தான் நடிகர் அல்லு அர்ஜூனை இன்று காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அல்லு அர்ஜுனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதன்மூலம் அல்லு அர்ஜுன் சிறையில் அடைக்கப்பட உள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக முழுவிபரத்தை அறிய இந்த வீடியோ காணொளியை காணவும்..