தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் தள்ளுபடி
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரை நீதிபதி பாப்டே தலைமையிலான விசாரணைக் குழு தள்ளுபடி செய்துள்ளது.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, உச்சநீதிமன்றத்தில் பணியாற்றிய முன்னாள் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். இந்தப் புகாரை அடுத்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, இதுகுறித்து விசாரிக்க மூத்த நீதிபதி பாப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டார். மேலும் இக்குழு ரகசியமாக விசாரணை நடத்தும் எனக் கூறப்பட்டது. நீதிபதி பாப்டே தலைமையிலான குழுவில் நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, இந்து மல்கோத்ரா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்நிலையில், நீதிபதி பாப்டே தலைமையிலான விசாரணைக் குழு ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரை தள்ளுபடி செய்துள்ளது. புகாருக்கான முகாந்திரம் ஏதுமில்லை எனக் கூறி மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் உள்விசாரணைக் குழு நடத்திய விசாரணையின் விவரங்கள் பொதுவெளியில் வெளியாகாது என நீதிபதிகள் தெரிவித்தனர். புகார் அளித்திருந்த பெண், விசாரணையில் இருந்து விலகிய நிலையில் மனுதள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

