டெல்லியில் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டி வரும் ஓட்டுநர்களுக்கு அரசு சார்பில் 5000 ரூபாய் நிதியுதவி கொடுக்கப்படும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
இந்த இக்கட்டான சூழலில் ஒரு சிறிய உதவியாக இது அவர்களுக்கு உதவும் என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் டெல்லியில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
“டெல்லியில் உள்ள அனைத்து ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கு உதவும் நோக்கில் டெல்லி அரசு சார்பில் 5000 ரூபாய் நிதி உதவி செய்ய திட்டமிட்டுள்ளோம். இது ஒரு உதவி தான். இந்த இக்கட்டான நிலையில் இது உதவும்” என அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் மட்டுமே 156000 பேர் ஆட்டோ ஓட்டி வருகின்றனர். அதோடு அடுத்த இரண்டு மாதங்களுக்கு ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கவும் டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.