நடுரோட்டில் பெண் காவலர் சவும்யா எரித்துக்கொல்லப்பட்ட விவகாரத்தில், அவரது தாய் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் மாவேலிக்கரையில் உள்ள வல்லிக்குன்னம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தவர் சவுமியா (32). இவர் கணவர் வெளிநாட்டில் இருக்கிறார். 3 குழந்தைகள் உள்ளன. இவர் வழக்கம் போல பணியை முடித்து விட்டு இரு சக்கர வாகனத்தில் நேற்றுமுன் தினம் வீட்டுக்குச் சென்றார். அவரை பின் தொடந்து வந்த கார் ஒன்று வாகனத்தின் மீது மோதியது. கீழே விழுந்த சவுமியாவை, காரில் இருந்து இறங்கிய இளைஞர் அரிவாளால் வெட்டினார். பின் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இந்த விபத்தில் அந்த இளைஞருக்கும் தீ பிடித்தது. அங்கிருந்து தப்பியோட முயன்ற அவரை பொதுமக்கள் பிடித்தனர். அதற்குள் தீயில் எரிந்து சவுமியா உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், பிடிபட்ட இளைஞரிடம் விசாரணை நடத்தியதில், ஆலுவா காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலராக பணியாற்றி வரும் அஜாஸ் என்பது தெரியவந்தது.
அஜாஸ் 40 சதவிகித தீக்காயத்துடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப்பெற்று வருகிறார். அவர் உடல் நிலை சீரியசாக இருக்கிறது. இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
சவுமியா கடந்த 4 வருடத்துக்கு முன் திருச்சூர் போலீஸ் அகாடமியில் பயிற்சிக்கு சென்றபோது அங்கு பயிற்சியாளராக இருந்தார் அஜாஸ். அப்போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டது. பின்னர் வல்லிக்குன்னம் காவல் நிலையத்தில் காவலராக நியமிக்கப்பட்டார் சவுமியா. அஜாஸ், ஆலுவா காவல்நிலையத்துக்கு சென்றார். அங்கிருந்து சென்ற பின்னும் இருவரும் நட்பை தொடர்ந்துள்ளனர். அஜாஸ், தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி சவுமியாவை தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். அவர் மறுத்துள்ளார். இதையடுத்தே இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்நிலையில் உயிரிழந்த சவும்யாவின் அம்மா இந்திரா மலையாள பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ‘’அஜாஸ், சவும்யாவுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்தார். இதுபற்றி என்னிடம் சவும்யா அடிக்கடி தெரிவிப்பார். இந்த தொல்லை காரணமாக போனில் அவர் நம்பரை பிளாக் செய்து வைத்தார். பின்னர் செல்நம்பரை மாற்றினார். இதனால் கோபமான அஜாஸ், வீட்டுக்கு வந்து பயங்கரமாக பிரச்னை செய்தார். ஒரு முறை எங்கள் வீட்டுக்கு வந்த அஜாஸ், சவும்யா மீது பெட்ரோலை ஊற்றி தீ வைக்க முயன்றார். பின்னர் ஷூவால் சவும்யாவை அடித்தார். சவும்யாவுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால், அவரது மூத்த மகனிடம் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதாவது, தனது உயிருக்கு ஏதும் ஆபத்தென்றால், அதற்கு காரணம் அஜாஸ்தான் என்று’’ எனக் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.
அஜாஸின் தொந்தரவு பற்றி, எர்ணாகுளம் சப் இன்ஸ்பெக்டர் ராஜன் பாபுவிடம் சவும்யா இரண்டு மாதத்துக்கு முன் தெரிவித்துள்ளார். அவர், இதைப் புகாராக எழுதி தரும்படி கேட்டுக்கொள்ளார். ஆனால், சவும்யா புகார் கொடுக்கவில்லை. இந்த தகவலையும் அவர் தாய் இப்போது போலீசில் தெரிவித்துள்ளார்.