சபரிமலை அருகே எரிமேலியில் விமான நிலையம் அமைக்க கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு விமான சேவை அளிக்கும் வகையில், இடத்தைத் தேர்வு செய்ய வருவாய் துறை செயலாளர் பி.ஹெச்.குரியன் தலைமையில் குழு ஒன்றை கேரள அரசு அமைத்தது. அந்தக் குழுவின் பரிந்துரைப்படி சபரிமலையில் இருந்து 48 கி.மீ. தொலைவில் உள்ள எரிமேலி செருவாலி ரப்பர் தோட்டம் அருகே 2,263 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையப் பணிகளைத் தொடங்க முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
செருவாலி ரப்பர் தோட்டத்தின் உரிமை தொடர்பாக திருவல்லாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிலீவர்ஸ் சர்ச் எனும் அமைப்பு மற்றும் கேரள அரசு இடையில் சர்ச்சை இருக்கிறது. இதுதொடர்பான வழக்கு கேரள உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.