துபாயில் இருந்து 191 பேருடன் கேரளாவுக்கு வந்த விமானம் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கும்போது பெரும் விபத்திற்குள்ளானது. இந்த விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி ஒரு பள்ளத்தில் பாய்ந்து இரண்டாக உடைந்தது. அதில் விமானி உள்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், விமானத்தில் பயணம் செய்தவர்கள் அனைவரும் அவசரகால தேவைகளுக்காக நாடு திரும்பியவர்கள் என துபாயின் இந்திய துணைத் தூதர் டாக்டர் அமன் பூரி தெரிவித்துள்ளார்.
"விமானத்தில் ஐந்து ஊழியர்கள் இருந்தார்கள். நாங்கள் விமானி தீபக் வசந்த் சாத்தேவை இழந்துவிட்டோம் என்பதில் மிகவும் வருத்தமடைகிறோம். துணை விமானியும் உயிரிழந்துவிட்டதாக கேள்விப்படுகிறோம். மேலும் வரும் தகவல்களை உறுதிப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம் " என்றும் துணைத்தூதர் குறிப்பிட்டுள்ளார்.
"விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவது உண்மைதான். அதிக எண்ணிக்கையில் பயணிகள் காயமடைந்துள்ளனர். எல்லோரும் அவசரத் தேவைகளின் காரணமாக பயணம் செய்தவர்கள். எல்லாவகையான பயணிகளும் இருந்தார்கள். சிலருக்கு விசா கேன்சலாகிவிட்டது. சிலர் காலாவதியான வழக்குகளைச் சந்தித்தவர்கள். சிலர் வேலையிழந்தவர்கள். வேறு சிலர் மருத்துவச் சிகிச்சைகளுக்காக பயணம் செய்தவர்கள்" என்றும் அமன் பூரி கூறியுள்ளார்.