ஆக்ரா | 17-ஆம் நூற்றாண்டில் ஒளரங்கசீப் கட்டிய ‘முபாரக் மன்சில்’ அரண்மனை புல்டோசரால் இடிப்பு!
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் கடந்த 17-ஆம் நூற்றாண்டில் ‘முபாரக் மன்சில்’ என்ற அரண்மனை ஒளரங்கசீப் ஆட்சியில் கட்டப்பட்டுள்ளது. இது, ’ஔரங்கசீப்பின் ஹவேலி’ என அழைக்கப்படுகிறது. ஆர்க்கிபால்ட் கேம்ப்பெல் கார்லைலின் 1871 அறிக்கையின்படி, ‘சமுகர் போரில் வெற்றிபெற்ற பிறகு ஔரங்கசீப் இதை கட்டியதாக எடுத்துக்காட்டியுள்ளார். மேலும் அந்தக் கட்டடக்கலையின் பிரதிபலிப்புகளையும் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த அரண்மனையில், ஷாஜஹான், ஷுஜா மற்றும் ஔரங்கசீப் உள்ளிட்ட முக்கிய முகலாய அரசர்கள் வசித்துள்ளனர். பிரிட்டிஷ் ஆட்சியில் இவ்வரண்மனை புதுப்பிக்கப்பட்டு அலுவலகமாக மாற்றப்பட்டு, இறுதியில் 1902இல் ’தாரா நிவாஸ்’ எனப் பெயர்பெற்றது.
இந்த நிலையில், முபாரக் மன்சிலை பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிப்பது தொடர்பாக ஆட்சேபனைகளை கேட்டு உ.பி. மாநில தொல்லியல் ஆய்வுத் துறை கடந்த செப்டம்பர் மாதம் அறிவிப்பு ஒன்று வெளியிட்டது. அதன்பின்னர், கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் மாநில தலைநகர் லக்னோவில் இருந்து வந்த அதிகாரிகள், முபாரக் மன்சிலை பாதுகாப்பது தொடர்பாக ஆய்வு செய்தனர். அவர்கள் வந்து சென்ற பிறகு முபாரக் மன்சிலை இடிக்கும் பணி தொடங்கிவிட்டது.
புல்டோசர்கள் மூலம் அந்த அரண்மனையை இடித்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட டிராக்டர்களில் இடிபாடுகள் கொண்டு செல்லப்பட்டன. தற்போது முபாரக் மன்சிலின் பெரும்பாலான பகுதிகள் இடிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து உள்ளூர்வாசிகள், “பில்டர் ஒருவருடன் போலீஸார், அதிகாரிகள் கூட்டு சேர்ந்து இந்த அரண்மனையை இடித்துவிட்டனர். பல புகார்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மல்லப்பா பங்காரி, “முபாரக் மன்சில் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை மற்றும் வருவாய்த் துறையினருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், இனிமேல் அந்த இடத்தில் வேறு மாற்றங்கள் எதுவும் செய்யக் கூடாது எனவும் இதுதொடர்பாக அறிக்கை சமர்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது” என்றார்