மியான்மர் சென்று தங்களின் பூர்வீகத்தை கண்டு ரசித்த மணிப்பூர் தமிழர்கள்

மியான்மர் சென்று தங்களின் பூர்வீகத்தை கண்டு ரசித்த மணிப்பூர் தமிழர்கள்

மியான்மர் சென்று தங்களின் பூர்வீகத்தை கண்டு ரசித்த மணிப்பூர் தமிழர்கள்
Published on

மணிப்பூர் வாழ் பர்மா தமிழர்கள் தங்களது முன்னோர்கள் வசித்த இடத்தை 60 வருடங்களுக்குப் பிறகு சென்று பார்த்தனர்.

மியான்மர் (பர்மா) நாடு பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு வந்த பிறகு அங்கு வேலைப் பார்ப்பதற்காக இந்திய மக்கள் அதிகம் சென்றனர். அவர்களில் முக்கியமானவர்கள் தமிழ்நாட்டிலிருந்து சென்ற தமிழர்கள். இவர்கள் அங்கு 1941 ஆம் ஆண்டு வரை மகிழ்ச்சியாக வசித்து வந்தனர். 1941ஆம் ஆண்டு பர்மா நகரான ரங்கூன் மீது ஜப்பான் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது. இதனால் பிரிட்டிஷ் படை மியான்மரிலிருந்து பின்வாங்கியது. ஆகவே மியான்மரில் வசித்து வந்த இந்திய மக்கள் அங்கிருந்து மணிப்பூர் வழியாக இந்தியாவிற்கு தப்பினர். இந்தச் சம்பவம் ‘தி லாங்க் மார்ச்’ (The Long March) வரலாற்றில் இடம்பெற்றது. 

அதன் பிறகு ஜப்பானுடனான போர் முடிவுக்கு வந்து, பர்மா 1948 ஆம் ஆண்டு விடுதலை பெற்றது. பர்மாவின் விடுதலைக்குப் பின் அங்கு வசிக்கும் இந்தியர்களின் நிலை மிக மோசமானது. இந்தியர்கள் மீது இனவெறித் தாக்குதல்கள் நடைபெற்றன. 

மேலும் அவர்களுக்கு குடியுரிமையும் மறுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1960ஆம் ஆண்டு சர்வாதிகாரி நி வின்(Ne Win) ஆட்சிக்கு வந்தார். அவர் சிறுபான்மை மக்களின் சொத்துக்களை நாட்டுமையாக்கினார். இதனால் 1962ஆம் ஆண்டு முதல் 1964ஆம் ஆண்டு வரை 3 லட்சம் இந்தியர்கள் பர்மாவிலிருந்து வெளியேறினர். அங்கிருந்து வெளியேறிய தமிழ் மக்கள் சிலர் தமிழ் நாட்டிலுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். 

பர்மாவிலிருந்து வந்த தமிழர்கள் மீண்டும் பர்மா செல்ல முயற்சித்தனர். ஆனால் அவர்கள் திருப்பி அனுப்பட்டனர். ஆகவே அவர்கள் அனைவரும் இந்தியா-மியான்மர் எல்லைப் பகுதியான மணிப்பூரின் மோரேஹ் பகுதியில் (moreh) வசிக்க ஆரம்பித்தனர். அதன் பின்னர் தற்போது வரை மோரேஹ் பகுதியில் 300 தமிழ் மக்கள் வசித்து வருகின்றனர். அங்கு வசிக்கும் தமிழர்கள் மேய்தி (Meitei) மொழியை கற்று சரளமாக பேசி வருகின்றனர். 

மோரேஹ்வில் வசிக்கும் தமிழர்கள் வணிகத்தில் சிறந்து விளங்கினர். அவர்கள் குறிப்பாக வீட்டு உபயோக மர வணிகத்தில் சிறப்பாக செயல்பட்டனர். முக்கியமாக பர்மா தேக்கு மர நாற்காலி வணிகத்தில் கைத்தேர்ந்தவர்களாக இருந்தனர். அத்துடன் கடந்த 2000ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிலிருந்து வேலையாட்களை வைத்து அங்கு அங்காள பரமேஸ்வரி கோயிலையும் கட்டியுள்ளனர். 

(picture courtesy: Scroll.in)

ஆனாலும் அவர்கள் பர்மா வாழ்க்கையை பெரிதும் இழந்துவிட்டதாக அடிக்கடி கூறி வந்தனர். இதுகுறித்து ‘ஸ்க்ரோல்’ தளத்திற்கு பர்மா தமிழ் மக்களில் ஒருவரான மோகன் பேட்டியளித்துள்ளார். அவர் கூறுகையில் “எனக்கு சிறு வயதிலிருந்து இரண்டு ஆசைகள்தான் இருந்தன. அது லண்டனுக்குச் செல்வது. அடுத்து பர்மாவிலுள்ள என் தாய்,தந்தையர் வசித்த வீட்டை காண்பது. அந்த ஆசை தற்போது நிறைவேறியுள்ளது. நான் என் தாய் பர்மாவில் வசித்து வந்த வீட்டைக் கண்டேன். அத்துடன் அந்த வீட்டின் முன் நின்று செல்ஃபி எடுத்தேன். அந்த நாள் தான் என்னுடைய வாழ்நாளில் மறக்கமுடியாத நாள்” எனக் கூறினார்.

(picture courtesy: Scroll.in)

மேலும் மோரே தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கணேசன், “பர்மா சென்று அங்குள்ள என்னுடைய சொந்தங்களை பார்த்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நான் குழந்தையாக வசித்த இடத்தை தற்போது நீண்ட நாட்களுக்குப் பிறகு கண்டது அளவில்லா மகிழ்ச்சியைத் தந்தது” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com