
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள தன்னுடைய மூதாதையர்கள் பிறந்த நாச்சிகுப்பம் கிராமத்திற்கு முதன் முறையாக நடிகர் ரஜினிகாந்த் வருகை தந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமம் நாச்சிக்குப்பம். நடிகர் ரஜினிகாந்த் மூதாதையர்கள், பெற்றோர்கள் இக்கிராமத்தில் வாழ்ந்துள்ளனர். இன்றைக்கும் ரஜினியின் உறவினர்கள், இக்கிராமத்தில் வசித்து வருகின்றனர். தற்போதும், ரஜினியின் அண்ணன் சத்தியநாராயண ராவ், உறவினர்களின் சுகதுக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் ரஜினி, தன் பூர்வீக கிராமத்தில் தனது பெற்றோர் ரானோஜிராவ் - ராம்பாய் நினைவகம் அமைப்பதற்காக 2.40 ஏக்கர் நிலத்தை வாங்கினார். இதற்காக அவரது அண்ணன் சத்தியநாராயண ராவ் மூலம் அப்போதே அடிக்கல் நாட்டினார். நிலத்தை சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டு, பெயர் பலகை வைக்கப்பட்டது. ஆனால் எவ்வித பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இருப்பினும் அவரது ரசிகர்கள் பொங்கல் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளை, இவ்விடத்தில் நடத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக நாச்சிக்குப்பம் கிராமத்தில் உள்ள நிலத்தை ரஜினியின் அண்ணன் நேரடியாக பராமரித்து வருகிறார். தற்போது, இங்கு ரஜினியின் பெற்றோர் ரானோஜிராவ் - ராம்பாய் சிலைகளுடன் நினைவகம் கட்டப்பட்டுள்ளது.
ரஜினியின் பெற்றோர் வாழ்ந்த காலத்திலேயே அவர்கள் பெங்களூருக்கு சென்றுவிட்டதால் இன்று வரை ரஜினி நாச்சிக்குப்பம் கிராமத்திற்கு வராமலேயே இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு முதல்முறையாக கிருஷ்ணகிரி மாவட்டம் நாச்சிகுப்பத்தில் தனது பெற்றோர்கள் வாழ்ந்த இடத்திற்கு வந்துள்ளார்.
ரஜினிகாந்த் வருவது தெரிந்தால் அதிக அளவில் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கூடுவார்கள் என்பதால் அவருடைய அண்ணன் சத்திய நாராயண ராவுடன் காரில் வந்து தனது பெற்றோர்களின் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு கிளம்பி விட்டார்.