JNU-வில் தமிழ்நாடு மாணவர்கள் மீது தாக்குதல்! கடும் கண்டனத்தை பதிவுசெய்த அரசியல் தலைவர்கள்

JNU-வில் தமிழ்நாடு மாணவர்கள் மீது தாக்குதல்! கடும் கண்டனத்தை பதிவுசெய்த அரசியல் தலைவர்கள்
JNU-வில் தமிழ்நாடு மாணவர்கள் மீது தாக்குதல்! கடும் கண்டனத்தை பதிவுசெய்த அரசியல் தலைவர்கள்

டெல்லி ஜே.என்.யூவில் மாணவ அமைப்புகளிடையே ஏற்பட்ட மோதலில் தமிழ்நாடு மாணவர் மீது ஏ.பி.வி.பி யினர் தாக்குதல் நடத்தியிருந்தனர். இதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளர்.

மும்பை ஐஐடியில் மர்ம மரணம் அடைந்த தலித் மாணவர் தர்ஷன் சொலான்கிக்கு நீதி கேட்டு, இடதுசாரி மாணவர் அமைப்பினர் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்று மாலை ஊர்வலம் சென்றனர். ஊர்வலம் சென்றவர்கள், `ஐஐடி வளாகங்களில் தலித், இஸ்லாமியர் உள்ளிட்ட விளிம்பு நிலை சமுதாயங்களை சேர்ந்த மாணவர்கள் மர்மமான முறையிலும், தற்கொலை செய்தும் உயிரிழந்து வருவதன் பின்னணியில் உள்ள சாதி, மத ஒடுக்குமுறை’ என்பது குறித்த ஆவணப்படமொன்று, அங்குள்ள மாணவர்கள் சங்க அலுவலகத்தில் திரையிடப்பட்டது. அதில் இடதுசாரி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மாணவர்கள் மற்றும் சில அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் என தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஜே.என்.யூ-வில் பயிலும் மாணவர்கள் பங்கேற்றனர். 

இந்த நிலையில் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த சத்ரபதி சிவாஜியின் படம் சேதமடைந்தது. இதற்கு சொலான்கி மரணத்துக்கு நீதி கோரி ஊர்வலம் சென்ற மாணவர்கள் தான் காரணம் எனக் கூறி ஏபிவிபி அமைப்பினர், ஆவணப்படம் திரையிடப்படவிருந்த அரங்கில் சென்று அங்கிருந்த மற்ற மாணவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். தாக்குதலின் போது அவர்கள் அங்கிருந்த பெரியார், அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ் உள்ளிட்டோரின் படங்களை அடித்து சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலில், தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் உட்பட பலர் படுகாயமடைந்தனர். தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர் நாசருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த மாணவர்களை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அங்கிருந்தவர்கள் முயன்ற நிலையில், அவர்களை மறித்து ஏ.பி.வி.பி.யினர் தடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது ஏபிவிபி அமைப்பினர், “சத்ரபதி சிவாஜியின் புகைப்படத்தை இடதுசாரி மாணவர்கள் அரங்கில் இருந்து வெளியே தூக்கி எரிந்தனர். அதற்கு போடப்பட்டிருந்த மாலையை குப்பைத் தொட்டியில் வீசினர். அதனால்தான் பிரச்சனை எழுந்தது. அப்போது இடதுசாரி மாணவர்கள் தன் முதலில் தாக்குதல் நடத்தினர்” என குற்றஞ்சாட்டினர். இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாக டெல்லி காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஏபிவிபியினர் மீது தமிழ்நாடு முதல்வர் உட்பட அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். அதன்படி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தனது அறிக்கையில், “பல்கலைக்கழகங்கள் என்பது கற்பதற்கு மட்டுமல்ல; விவாதங்கள், கலந்தாலோசனைகள் ஆகியவற்றுக்கும்தான். அப்படியிருக்க, ஜேஎன்யுவில் தமிழ் மாணவர்கள் மீது ஏபிவிபி நடத்திய கோழைத்தனமான தாக்குதல் மற்றும் பெரியார், கார்ல் மார்க்ஸ் போன்ற தலைவர்களின் உருவப்படங்களை சேதப்படுத்தியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. குற்றவாளிகள் மீது பல்கலைக்கழக நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது. 

‘நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்’ என மாணவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். மத்திய பாஜக ஆட்சியை விமர்சித்ததற்காகவும், தங்களது உரிமைகளுக்காகப் போராடியதற்காகவும் மாணவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையை, பார்வையார்களாக பார்த்துக்கொண்டு அமைதியாக இருந்துள்ளது ஜேஎன்யு நிர்வாகமும் & டெல்லி காவல்துறையும். குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், தமிழக மாணவர்களை பாதுகாக்கவும் கல்லூரி துணை வேந்தரை கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டார்.

விசிக தலைவர் தொல் திருமாவளவன், “பெரியார்,மார்க்ஸ் படங்கள் அவமதிப்பு! தமிழ்நாட்டு மாணவர் மீது கொலைவெறித் தாக்குதல்! ஏபிவிபி குண்டர்களின் மக்கள்விரோதப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம்! வன்முறையில் ஈடுபட்ட ஏபிவிபி மாணவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க பல்கலைக்கழக நிர்வாகத்தை வலியுறுத்துகிறோம்” என்று கூறியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ், “தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்க்கழகத்தில் இன்று நடைபெற்ற பேரணியின் போது தமிழ்நாட்டைச் சேர்ந்தோர் உள்ளிட்ட மாணவர்கள் தாக்கப்பட்டிருக்கின்றனர். தந்தை பெரியார், கார்ல் மார்க்ஸ் உள்ளிட்ட தலைவர்களின் உருவப்படங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இவை கண்டிக்கத்தக்கவை! பல்கலைக்கழக வளாகங்களில் நீதி கேட்டு போராடும் உரிமை அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது; அதை தடுக்கும் உரிமை யாருக்கும் வழங்கப்படவில்லை. மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றுள்ளார்.

வைகோ, “நேற்று பிப்ரவரி-19 ஆம் தேதி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பயின்று வரும் 30 க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மாணவர்கள், “ரிசர்வேசன் கிளப்’ என்ற பெயரில் பெரியாரின் கருத்துகள் தொடர்பான கருத்தரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்து நடத்தியுள்ளனர். கூட்டம் முடிந்த பின்னர், அரங்கிற்கு வந்த ஏ.பி.வி.பி அமைப்பினர் பெரியார் படத்தையும் அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர். இதனைத் தடுக்கச் சென்ற மாணவர்கள் மீது 15க்கும் மேற்பட்டோர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாசர் என்ற மாணவருக்கு தலையில் பலத்தக் காயம் ஏற்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் காயம் அடைத்த மாணவர்கள் சிலரும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் மற்றும் பொதுஉடைமைத் தலைவர்களை இழிவு படுத்தி வரும் ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் கும்பலின் இத்தகைய செயல்கள் கடும் கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டு மாணவர்கள் மீது கொடூர வன்முறையை ஏவி, தந்தை பெரியார் திருவுருவப்படத்தையும் சேதப்படுத்திய ஏ.பி.வி.பி. கும்பலை கைது செய்து, சிறையில் அடைக்க வேண்டும். காயம் அடைந்த மாணவர்களுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்றுள்ளார்.

அதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், ஏ.பி.வி.பி அமைப்பினர் கொலைவெறித் தாக்குதலில் தமிழ் நாட்டை சேர்ந்த மாணவர் நாசர் காயமுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தந்தை பெரியார் படம் உள்ளிட்டு சேதமாக்கப் பட்டுள்ளது” என்று தன்னுடைய ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com