விய்ம்பெல் ஆர் 73 ரக ஏவுகணையை அபிநந்தன் பயன்படுத்தி, பாகிஸ்தானின் எஃப் 16 விமானத்தை வீழ்த்தினார். ஆர் 73 ஏவுகணையை அவர் தேர்வு செய்த தகவலை விமானத்தில் இருந்து அனுப்பியதே கடைசி ரேடியோ செய்தியாகும்.
பாகிஸ்தானிலிருந்து விடுவிக்கப்பட்ட இந்திய விமானப்படை விமானி அபிநந்தன், டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விமானத்திலிருந்து பாரசூட்டில் குதித்ததில் அவருக்கு பின் முதுகெலும்பு மற்றும் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
எனினும், தாம் விரைவில் பணிக்கு திரும்பி, விமானத்தை செலுத்துவதற்கு விரும்புவதாக அபிநந்தன் தெரிவித்ததாக மருத்துவர்களும் மூத்த விமானப்படை அதிகாரிகளும் கூறியுள்ளனர்.
நாடு போற்றும் ஹீரோவாகிவிட்ட அபிநந்தனை, தங்களுக்கு சாதகமாக்க சிலர் முயற்சி எடுத்துள்ளனர். அவரது பெயரில் தொடங்கப்பட்டுள்ள ட்விட்டர் கணக்குகளில் அபிநந்தன் மற்றும் அவரது அவரது குடும்பத்தினரின் புகைப்படம், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அமர்ந்து பேசியது உள்ளிட்ட பல்வேறு புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன.
மேலும், மத்திய அரசுக்கு சர்ச்சையை ஏற்படுத்தும் சில பதிவுகளும் அதில் பதிவிடப்பட்டுள்ளன. இவை போலியான கணக்குகள் என மத்திய அரசு உறுதிபடுத்தியுள்ளது.
இதனிடையே அபிநந்தன் அனுப்பிய கடைசி ரேடியோ செய்தி என்ன என்பது தற்போது வெளியாகியுள்ளது. கடந்த 27ஆம் தேதி பாகிஸ்தான் விமானப்படையின் எஃப் 16 ரக போர் விமானங்கள் இந்திய வான்பரப்பில் அத்துமீறி நுழைந்தன.
MIG 21 BISON போர் விமானத்தில் சென்ற விங் கமாண்டர் அபிநந்தன், ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியின் சுந்தர்பன் பகுதியில் காலை 10 மணிக்கு வான் பரப்பில் அவற்றை இடைமறித்தார். அப்போது வானில் நடைபெற்ற சண்டையில் விய்ம்பெல் ஆர் 73 ரக ஏவுகணையை அபிநந்தன் பயன்படுத்தி, பாகிஸ்தானின் எஃப் 16 விமானத்தை வீழ்த்தினார். ஆர் 73 ஏவுகணையை அவர் தேர்வு செய்த தகவலை விமானத்தில் இருந்து அனுப்பியதே கடைசி ரேடியோ செய்தியாகும்.