2,700 மரங்களை வெட்ட மும்பை மாநகராட்சி முயற்சி - ஹேஸ்டேக் மூலம் எதிர்ப்பு
மும்பை அரே வனப்பகுதியிலுள்ள மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் ஹேஸ்டேக் ஒன்று ட்ரெண்டாகி வருகிறது.
மெட்ரோ ரயில் பணிகளுக்காக இரண்டாயிரத்து 700 மரங்கள் வெட்ட மும்பை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரே காலனி மக்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக முக்கிய சமூக ஆர்வலர்கள் பலர் நேற்று முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் விடிய விடிய போராட்டம் நடத்தியவர்களைக் காண சம்பவ இடத்துக்கு பிரியங்கா திரிவேதி சென்றார். ஆனால் அங்கு 144 தடை விதிக்கப்பட்டிருப்பதால் போராட்டக்காரர்களை சந்திக்க பிரியங்காவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவரை போராட்டக்காரர்களை சந்திக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனிடையே, அரே காலனி மக்களுக்கு ஊர்மிளா மடோன்கர், தியா மிர்சா, ஷ்ரத்தா கபூர், ஃபர்ஹான் அக்தர் உள்ளிட்ட பாலிவுட், பூஜா ஹெக்டே போன்ற பிரபலங்கள் தங்களின் ட்விட்டர் பக்கம் வாயிலாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அத்துடன் ட்விட்டரில் '#ArayForest' என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இது இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த ஹேஸ்டேக்கில் அரே பகுதியில் நடக்கும் போராட்டத்திற்கு தங்களின் ஆதரவை பதிவிட்டு வருகின்றனர். சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடாது என்று சிலர் பதிவிட்டு வருகின்றனர்.