சிறுமி மரணம்: ரேஷன் வாங்க ஆதார் வேண்டாம் என ஜார்கண்ட் அரசு அறிவிப்பு
11 வயது சிறுமி ரேஷன் பொருட்கள் கிடைக்காததால் உயிரிழந்ததாக வந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து ரேஷன் பொருட்கள் வாங்க ஆதார் அவசியமில்லை என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த செப்டம்பர் 28ம் தேதி 11 வயது சிறுமி பட்டினியால் உயிரிழந்ததாக பரவிய செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏழ்மையான அந்தக் குடும்பத்தினர் ரேஷன் பொருட்களையே பிரதானமாக நம்பி இருந்தனர். அவர்கள் ரேஷன் பொருட்கள் வாங்க ஆதார் அட்டை வேண்டும் எனக் கேட்ட நிலையில், அவர்களிடம் ஆதார் இல்லை. எனவே ரேஷன் பொருட்கள் வழங்கப்படவில்லை. எனவே அந்தச் சிறுமி உயிரிழந்தார் எனக் கூறப்பட்டது.
இந்த நிலையில் ஜார்கண்ட் மாநில உணவுத்துறை அமைச்சர் சரயு ராய், ரேஷன் பொருட்கள் வாங்க ஆதார் அட்டை அவசியமில்லை என்று கூறியிருக்கிறார். ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அட்டை போன்றவற்றைக் கூட ரேஷன் பொருட்கள் வாங்கப் பயன்படுத்தலாம் என அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே சிறுமி மரணம் குறித்து ஜார்கண்ட் அரசு ஒரு விசாரணையை நடத்தியது. அந்த விசாரணை முடிவில் சிறுமி பட்டினியால் இறக்கவில்லை. மலேரியா காய்ச்சலால் உயிரிழந்தார் எனக் கூறப்பட்டுள்ளது.