மகா கும்பமேளாவில் வைரலான இளம்பெண்.. செல்ஃபி எடுக்க குவிந்த கூட்டம்.. ஊருக்கே திரும்பும் நிலை!
மகா கும்பமேளாவில் மக்களின் மனதை வென்ற இளம்பெண், பலரின் செல்பி மோகத்தால் சொந்த ஊருக்கே திரும்பும்
நிலை ஏற்பட்டுள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் 16 வயது இளம்பெண் மோனாலிசா போஸ்லே. இவர், உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெறும் மகா கும்பமேளாவில் கைகளால் செய்யப்படும் பாசி மாலையை விற்று வந்தார். அழகான கண்கள், கருமை நிறம், சிரித்த முகம், தன்னம்பிக்கையான பேச்சு, எளிமையான தோற்றம் என இயற்கை அழகால், இணையத்தில் திடீரென வைரலானார். "brown beauty" என நெட்டிசன்கள் இவரது வீடியோக்களை அதிகளவில் பகிர்ந்தனர்.
இதையடுத்து அவர் விற்கும் மாலையை வாங்குவோரின் எண்ணிக்கையைவிட, அவருடன் செல்பி மற்றும் வீடியோ
எடுத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. வசதி
படைத்தோர்கூட கும்பமேளாவில் மோனாலிசாவை தேடி சென்று செல்பி எடுத்துக் கொள்ளும் நிகழ்வும் அரங்கேறியது.
அதேநேரம், மிகப்பெரிய ஆன்மீக நிகழ்வான கும்பமேளாவில் ஒரு இளம்பெண்ணை பலரும் சுற்றி சுற்றி வந்து அவமரியாதை செய்வதாக விமர்சனங்களும் எழுந்தன.
இந்நிலையில், மக்கள் தனது மகளிடம் மாலைகளை வாங்குவதைவிட செல்பியே அதிகளவில் எடுப்பதாக கூறி,
மோனாலிசாவின் தந்தை, அவரை இந்தூருக்கே திருப்பி அனுப்பியுள்ளார்.