ஒடிசா: ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதற்காக லாரி டிரைவரிடம் ரூ.1000 அபராதம்
ஒடிசா மாநிலத்தின் கஞ்சம் மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியற்காக லாரி டிரைவரிடம் ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்துள்ளனர் போக்குவாரத்துறை அதிகாரிகள். லாரி டிரைவர் புரோமோத் குமார் ஸ்வெயின் என்பவரிடம் இந்த அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
தனது லாயின் பர்மீட்டை புதுப்பிக்க அவர் போக்குவரத்துத் துறை அலுவலகத்திற்கு சென்றபோது இந்த அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. தனது லாரி பதிவெட்டு எண்ணின் நிலுவைத் தொகை குறித்து ஆராய்ந்தபோது, கடந்த டிசம்பரில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய புகார் நிலுவையில் உள்ளதை அறிந்து அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். அபராதம் செலுத்திய பிறகே லாரியின் பர்மீட்டிற்கு அதிகாரிகள் அனுமதி கொடுத்துள்ளனர்.
“நான் மூன்று வருடமாக இந்த லாரியை ஓட்டி வருகிறேன். தண்ணீர் விநியோகிக்கும் பணியை அதன் மூலம் செய்கிறேன். பர்மீட்டை புதுப்பிக்க வந்தபோது தான் இது குறித்து அறிந்தேன். மக்களை காரணமே இல்லாமல் அபராதம் செலுத்த சொல்லி நிர்பந்திக்கிறார்கள். இதற்கு அரசு தான் ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என புரோமோத் தெரிவித்துள்ளார்.