ராஜஸ்தான்: அரை நிர்வாணமாக வெயிலில் உட்கார மறுத்ததால் மனைவியை கொடூரமாக தாக்கிய ஆசிரியர்!

ராஜஸ்தான்: அரை நிர்வாணமாக வெயிலில் உட்கார மறுத்ததால் மனைவியை கொடூரமாக தாக்கிய ஆசிரியர்!
ராஜஸ்தான்: அரை நிர்வாணமாக வெயிலில் உட்கார மறுத்ததால் மனைவியை கொடூரமாக தாக்கிய ஆசிரியர்!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் தமது மனைவி, மகளை கொடூரமான முறையில் பள்ளி ஆசிரியர் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் தமது மனைவியை ஈவு இரக்கமின்றி தாக்குதல் நடத்தியுள்ளார். அதனை தடுக்க முயன்ற மகளையும் அடித்து உதைத்தார். இதுதொடர்பாக வெளியான வீடியோ அடிப்படையில் ஆசிரியர் கைலாஷ் சுதர் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஜோத்பூரின் பலோடி டவுன் பகுதியைச் சேர்ந்த கைலாஷ் சுதர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவியை சுட்டெரிக்கும் வெயிலில் அரை நிர்வாணத்தில் உட்கார்ந்து சாப்பிடும்படி வற்புறுத்தியிருக்கிறார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த அந்த பெண்ணை அடித்து துன்புறுத்திய போது அவரது மகள் குறுக்கிட்டு தடுத்ததால் அவரையும் கைலாஷ் கடுமையாக தாக்கியிருக்கிறார் என ஹிந்துஸ்தான் டைம்ஸ் தளத்தில் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த சம்பவங்கள் அனைத்தும் அந்த ஆசிரியரின் வீட்டில் உள்ள சிசிடிவி காமிராவில் பதிவான வீடியோதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது. இதனையடுத்தே போலீசார் கைலாஷை கைது செய்திருக்கிறார்கள். இருப்பினும் பாதிக்கப்பட்ட பெண்ணோ, அவரது குடும்பத்தினரோ எந்த புகாரும் அளிக்கவில்லையாம்.

இது தொடர்பாக பேசியுள்ள பலோடி காவல்துறை அதிகாரி ராகேஷ் குமார், “சமூக வலைதளங்களில் வீடியோ வைரலான நிலையில் ஆசிரியர் கைலாஷை கைது செய்திருக்கிறோம். விசாரணையின் போது, அவரது மனைவி மனநல பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வருகிறார் என்றும், அவரை கட்டுப்படுத்த முயன்ற போதே இப்படி நடந்தது என்றும் தெரிவித்துள்ளார்” எனக் கூறியுள்ளார்.

இதனையடுத்து பொது அமைதியை கெடுக்கும் விதமாக செயல்பட்டதால் கைலாஷ் மீது 151 சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது எனவும் போலீசார் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com