\
ஒரே சமயத்தில் 2 வெவ்வேறு மொழிகளை 2 கைகளால் எழுதி மாணவி அசத்தல்!

ஒரே சமயத்தில் 2 வெவ்வேறு மொழிகளை 2 கைகளால் எழுதி மாணவி அசத்தல்!

ஒரே சமயத்தில் 2 வெவ்வேறு மொழிகளை 2 கைகளால் எழுதி மாணவி அசத்தல்!
Published on

தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், கன்னடம் உள்ளிட்ட 21 மொழிகளில் ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு மொழியில் 2 கைகளாலும் எழுதி அசத்திவருகிறார் ஒரு பள்ளி மாணவி அஸ்வினி.

திருப்பதியை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் பாஸ்கர் ராஜ். தனியார் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றி வந்த அவர், பெரும்பாலான மாணவ மாணவிகளின் கையெழுத்து சரியாக இல்லாததை பார்த்து வேதனை அடைந்தார். எனவே அவர்களுடைய கையெழுத்தை முதலில் சரி செய்தால் தலையெழுத்தையே மாற்றி விடலாம் என்ற முடிவுக்கு வந்தார். அதற்காக தான் பார்த்து வந்த ஆசிரியர் பணியை விட்டு விலகிய அவர், ரைட்டிங் ஹாஸ்பிடல் ரிசர்ச் என்ற பெயரில் இன்ஸ்டியூட் ஒன்றை துவங்கி அதன் மூலம் மாணவ மாணவிகளின் கையெழுத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் அவருடைய மகள் அஸ்வினிக்கு ஒரே நேரத்தில் இரண்டு கைகளையும் பயன்படுத்தி இரண்டு வெவ்வேறு மொழிகளில் எழுதும் திறன் இருப்பதை அறிந்தார். அவருடைய திறனை மேம்படுத்த முடிவு செய்த பாஸ்கர் ராஜ் மகளுக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், ஹிந்தி, உருது ஆகியவை உள்ளிட்ட 21 மொழிகளை பயிற்றுவித்தார். இதனால் 21 வெவ்வேறு மொழிகளில் ஒரே நேரத்தில் இரண்டு கைகளாலும், இரண்டு வெவ்வேறு மொழிகளில் எழுதும் திறனை பெற்ற அஸ்வினி, இதுவரை 10 முறை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார்.

இது தவிர பல்வேறு நிறுவனங்கள் அவருக்கு பாராட்டுகளையும் விருதுகளையும் வழங்கி உள்ளது. தற்போது தான் படிக்கும் பள்ளியில் மாணவ மாணவிகளின் கையெழுத்துக்களை சரி செய்யும் பணியில் அஸ்வினி ஈடுபட்டிருக்கிறார். அஸ்வினியின் திறமையை பார்த்து ஆசிரியர், ஆசிரியைகள் உட்பட பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com