மகனைக் கொன்ற பெங்களூரு சிஇஓ: இதுபோல் பல வழக்குகள்.. ஆயினும் வெற்றிபெற்ற சுசனா சேத் கவனம்பெற்றது ஏன்?
இரண்டு குழந்தைகளை விஷம்வைத்து கொன்ற அபிராமி!
பெற்ற தாய்மார்களே தங்களது பிஞ்சுக் குழந்தைகளைத் துடிதுடிக்கக் கொல்வதும் சித்ரவதை செய்வதும் ஜீரணிக்க முடிவதில்லை. எனினும், இதுபோன்ற செயல்கள் இன்று, நேற்று நடப்பது அல்ல... கடந்த பல ஆண்டுகளாவே நடைபெற்று வருகின்றன. இன்னும் சொல்லப்போனால், இதேபோன்ற ஒரு சம்பவம் கடந்த 2018ஆம் தமிழகத்தில் அரங்கேறி தலைப்புச் செய்தியான கதை எல்லாம் உண்டு. ஆம், சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த அபிராமி என்பவர், திருமணத்தைக் கடந்த உறவில், தன் குழந்தைகள் இருவருக்கும் பாலில் விஷம் வைத்துக் கொன்றார். இது வெறும் ஓர் உதாரணம்தான் என்றாலும், இதுபோன்ற செய்திகளும், இதற்கான வழக்குகள் கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் அதிகரித்தப்படியே உள்ளது என்பதுதன் வியப்பான விஷயம்.
கடந்த ஆண்டுகளில் பதிவான வழக்குகள்
கடந்த ஆண்டில் மட்டும் பெற்ற தாயே குழந்தைகளைக் கொன்ற வழக்குகள் 5 என ஆயவறிக்கை ஒன்று கூறுகிறது. இதில் சில வழக்குகள் திருமணத்தைக் கடந்த உறவால் ஏற்பட்டது என்றாலும், 2 வழக்குகள் மட்டும் வேறுவகையில் அரங்கேறியுள்ளது. நவம்பர் மாதம் பதிவான வழக்கு ஒன்றில், மகனின் நோயைக் குணப்படுத்த மகளைப் பலிகொடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. டிசம்பர் மாதம் பதிவான மற்றொரு வழக்கில், தொலைபேசியில் பேசவிடாமல் தொந்தரவு செய்த குழந்தை கொலை செய்யப்பட்டுள்ளது.
சுசனா சேத்தின் வழக்கு மட்டும் பேசுபொருளாவது ஏன்?
இப்படி, கடந்த சில ஆண்டுகளில் மட்டும் எண்ணற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆயினும், சமீபத்தில் கோவாவில் தனது 4 வயது மகனைக் கொலை செய்த பெங்களூரு பெண் தொழிலதிபரின் கைது விவகாரம் மட்டும், நாடு முழுவதும் பேசுபொருளாவதற்கு முக்கியக் காரணம் என்ன என்பதுதான் பலருடைய கேள்வியாக இருக்கிறது. முக்கியமாக, தொழில் துறையில் ஒரு வெற்றிப் பெண்ணாக வலம்வந்த சுசனா சேத், அதிலும் செய்யறிவு தொழில்நுட்பத் துறையில் அறிவாளியான 100 பெண்களின் பட்டியலில் இடம்பெற்றவர் ஏன் இப்படியான கொலையைச் செய்ய வேண்டும் என்பது குறித்துத்தான் பலரும் பேசுகின்றனர்.
இந்த கொலைக்குப் பின்னணியில் திருமணத்தைக் கடந்த ஓர் உறவோ அல்லது தனது வாழ்க்கைக்கு குழந்தை ஓர் இடையூறாக இருக்கிறதோ என்ற எண்ணம் துளிகூட இருக்க வாய்ப்பில்லை என்பதுதான் பலருடைய எண்ணமாக இருக்கிறது. அதேநேரத்தில், இந்தக் கொலையை சுசனா செய்வதற்கு என்ன மர்ம காரணம் இருக்கிறது என்பதும் அவர்களுடைய கேள்வியாக இருக்கிறது.
கணவன் மீதான வெறுப்பே அவரை இத்தகைய நிலைக்கு தள்ளியிருக்கலாம்!
இதுகுறித்து மனோதத்துவ வல்லுநர்கள், “சுசனா சேத் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. அந்த வழக்கில் கணவர்மீது சுசனாவால் குடும்ப வன்முறை குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கணவர் வன்முறையாளர் என நீதிமன்றத்தில் சுசனா தெரிவித்துள்ளார். இதற்கான ஆதாரம்கூட (ஐலைனர் மூலம் எழுதப்பட்ட கடிதம்), இன்று போலீசாரால் கைப்பற்றப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் பிரிந்த கணவருக்கு வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் குழந்தையைப் பார்த்துக்கொள்ள நீதிமன்றம் அனுமதியளித்து உள்ளது. இதில்தான் அவருக்கு விரக்தியும் வெறுப்பும் ஏற்பட்டுள்ளது.
அதாவது, பிரிந்த கணவருக்கு குழந்தையை காண்பிக்கக்கூடாது என்பதை எண்ணமாகக் கொண்டிருக்க வேண்டும். அடுத்து, இதே எண்ணத்தில் அவர் இருக்கும் சூழலில், குழந்தையைப் பார்க்க அனுமதி கிடைத்ததால், தன் கணவர் குழந்தையுடன் பழகி, குழந்தையைத் தன்னிடமிருந்து பிரித்துவிடுவாரோ என்ற பயமும் அவரிடம் இருந்துள்ளது. இதன் காரணமாகவே அவர் மகனைக் கொன்றிருக்கலாம். இன்னும் சொல்லப்போனால், கணவன் மீதான வெறுப்பு மற்றும் அவருடனான போட்டியில் வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் குழந்தையைக் கொன்றிருக்க வேண்டும். எனினும், வாழ்க்கையில் உயரங்களை எட்டிக்கொண்டிருந்த பெண் ஒருவர் இப்படி ஒரு சம்பவத்தை நிகழ்த்தியிருப்பதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது” என்கின்றனர்.
மனோதத்துவ வல்லுநர்கள் கூறும் இதுபோன்ற காரணங்களை நாம் ஓரளவில் ஏற்றுக்கொண்டாலும்கூட, உண்மையில் இந்த வழக்கில் என்ன நடைபெற்றது என்பது போலீசாரின் விசாரணையிலேயே முழுவதுமாகத் தெரியவரும்.