ஊரடங்கால் மகன்களுடன் 25 நாட்கள் நடைபயணம் மேற்கொண்ட தாய் - அதிர்ந்த போலீசார்
ஊரடங்கு உத்தரவு காரணமாக 25 நாட்கள் நடைபாதையாகவே இரு மகன்ளுடன் சொந்த ஊருக்கு பெண் ஒருவர் திரும்பியுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் நடத்தி வரும் நிலையில், இந்தியாவிலும் கடந்த மாதத்தில் இருந்து கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கால் கொரோனா தொற்று பரவல் பெருமளவு தடுக்கப்பட்டாலும், அமைப்பு சாரா தொழிலாளர்கள், ஆதரவற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
குறிப்பாக பணி நிமித்தமாக பிற மாநிலங்களுக்கு சென்ற வெளி மாநிலத்தவர்கள், உணவுக்கு கூட வழி இல்லாததால் பல கிலோமீட்டர்கள் நடைபாதையாக அவர்களின் சொந்த ஊருக்கு சென்றனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அதிர்வையும் ஏற்படுத்தியது. தற்போதும் அதே போன்று ஒரு பெண், தனது இரு மகன்களுடன் 25 நாட்கள் நடை பயணமாகவே தனது சொந்த ஊரை அடைந்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆர்த்தி கோட். கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், அன்றைய தினம் சொந்த ஊருக்கு திரும்புவதற்காக விடுதியில் தங்கியிருந்த தனது இரு மகன்களான பிரனய் (14) மற்றும் சிவனை (8) அழைத்துக்கொண்டு ரயில் நிலையத்திற்கு புறப்பட்டுள்ளார். ஆனால் அவர்கள் ரயில் நிலையம் அடைவதற்குள் ரயில் சென்று விட்டது.
இதனால் செய்வதறியாமால் நின்ற ஆர்த்தி ஒரு கட்டத்தில் நடைபாதையாகவே சொந்த ஊருக்கு செல்ல முடிவெடுத்தார். கால் வலி ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் பசி. இதனால் வழியில் கண்ணில் படும் நபர்களிடம் பிச்சை எடுத்து உணவையும் காசையும் பெற்று தனது மகன்களுக்கு உணவை வழங்கியுள்ளார். மார்ச் 22-ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 13 வரை கிட்டத்தட்ட 25 நாட்கள் நடைபாதையாகவே வந்த ஆர்த்தி ஏப்ரல் 13-ஆம் தேதி கோரேகானுக்கு வந்தடைந்துள்ளார்.
ஆர்த்தியின் கணவர் அசோக் ஒரு தினக்கூலி. ஆர்த்தியிடம் செல்போன் இல்லாததால் கணவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஏப்ரல் 13 தேதி கோரேகானுக்கு வந்த ஆர்த்தி வழியில் சென்று கொண்டிருந்த ஒருவரிடம் செல்போனை வாங்கி அசோக்கை தொடர்பு கொண்டுள்ளார். இதனையடுத்து விரார் (Virar) நகரில் இருந்த அசோக்கும் நடைபாதையாகவே கோரேகானுக்கு (Goregaon) வந்துள்ளார்.
ஏப்ரல் 14 தேதி காலை 6 மணிக்கு கோரேகானுக்கு (Goregaon) வந்தடைந்த அசோக் தனது குடும்பத்தை அழைத்துக்கொண்டு, வசய் நகருக்கு சென்றுள்ளார். அன்று மாலை வசய் நகரை வந்தடைந்த அவர்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அதன் பின்னர் நடத்திய விசாரணையில் அவர்கள் நடந்தே வந்தது விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட இடம், அவர்களின் வீட்டிலிருந்து 14 கி மீ தூரத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.