மகாராஷ்டிராவில் பாஜகவிற்கு ஆதரவு அளித்துள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் 9 பேர் டெல்லி செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிராவில் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்குமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக பாரதிய ஜனதாவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வரக பதவியேற்றுக்கொண்டார். ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி தேவேந்திர ஃபட்னாவிஸுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 9 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுள்ளனர். இதில் தவுளத் தரோடா, நர்ஹரி சிர்வார், சுனில் பூசாரா, திலீப் பன்கர், அனில் பைதாஸ் பாட்டில், நிதின் பவார், சுனில் செல்கே, பாபாசாஹேப் பாட்டில் மற்றும் சஞ்சய் பன்சான் ஆகிய 9 பேரும் அஜித் பவாருடன் இணைந்து பாஜக ஆட்சிக்கு ஆதரவு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தலமையில் அக்கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களின் கூட்டம் தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. அதேபோல சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்ரே தலைமையில் சிவசேனா எம்.எல்.ஏக்களின் கூட்டம் தற்போது ஒரு தனியார் ஓட்டலில் நடைபெற்று வருகிறது.