5 ஏக்கர் நிலத்துக்கு வெறும் ரூ.4லட்சம்: மனமுடைந்து விவசாயி தற்கொலை
மகாராஷ்டிரா தலைமைச் செயலகம் முன்பு கடந்த வாரம் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற விவசாயி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
வடமகாராஷ்டிராவை சேர்ந்தவர் தர்மா படேல். அனல் மின்நிலைய திட்டத்திற்காக இவரது நிலத்தை அரசு வாங்கிக்கொண்டது. இவரின் 5ஏக்கர் நிலத்திற்கு அரசு வெறும் 4லட்சம் ரூபாய் மட்டுமே அளித்துள்ளதாகத் தெரிகிறது. தனக்கு இழப்பீடு வழங்கக்கோரி மாநில அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்துள்ளார். மாநில தலைமைச்செயலகத்தில் இதுதொடர்பாக பலமுறை மனு அளித்துள்ளார். அரசு இவரது மனுவுக்கு செவிசாய்க்கவில்லை. இந்நிலையில் மனமுடைந்த விவசாயி தர்மா படேல் மாநில தலைமைச் செயலகம் முன்பு கடந்த வாரம் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் தர்மா படேல் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிந்தார்.
தனது தந்தை உயிரிழப்புக்கு நீதி கிடைக்காமல் அவரது உடலை வாங்க மாட்டேன் என அவரது மகன் தெரிவித்துள்ளார்.மேலும் தனக்கு உரிய நீதி கிடைக்கவில்லையென்றால் தானும் தற்கொலை செய்து கொள்வேன் எனத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் தற்போது தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி செய்து வருகிறது. தர்மா படேல் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. ஆனால், அரசின் இழப்பீட்டுத் தொகையை வாங்க அவரது குடும்பத்தினர் மறுத்துவிட்டனர்.