மீண்டும் வெடித்த 'எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி' - 80 வயது முதியவர் பலி!

மீண்டும் வெடித்த 'எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி' - 80 வயது முதியவர் பலி!
மீண்டும் வெடித்த 'எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி' -  80 வயது முதியவர் பலி!

தெலங்கானாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்ததில் 80 வயது முதியவர் உயிரிழந்த சம்பவம் மீண்டும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் வசித்து வருபவர் பிரகாஷ். இவர் தனது பெற்றோர் மற்றும் மனைவியுடன் வசித்து வந்தார். பிரகாஷ் கடந்த ஒரு வருடமாக எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பயன்படுத்தி வந்துள்ளார். புதன் அன்று இரவு வழக்கம்போல பேட்டரியை சார்ஜ் செய்துள்ளார். ஆனால் அப்போது எதிர்பாராத விதமாக பேட்டரி வெடித்து தீப்பிடித்து எரியத் துவங்கியது. இதில் பிரகாஷின் அப்பா ராமசாமி பலத்த தீக்காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். ராமசாமியின் மனைவி கமலம்மா, மகன் பிரகாஷ், மருமகள் கிருஷ்ணவேணி ஆகியோர் அவரைக் காப்பாற்ற முயன்று படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து “பியூர் EV” என்ற உற்பத்தியாளர் மீது அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்தியதாக போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ப்யூர் EV தரப்பில், “இந்த சம்பவத்திற்கு நாங்கள் ஆழ்ந்த வருந்தங்களை தெரிவிக்கிறோம். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிக்கிறோம். பயனரின் தரவுத்தளத்தில் இந்த வாகனம் அல்லது சேவையை விற்பனை செய்ததற்கான எந்தப் பதிவேடும் இல்லை. வாகனம் செகண்ட் ஹேண்ட் விற்பனை மூலம் வாங்கப்பட்டதா என்பதைச் சரிபார்த்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் அவரது டிவிட்டர் பக்கத்தில் “கடந்த இரண்டு மாதங்களில் மின்சார இரு சக்கர வாகனங்கள் சம்பந்தப்பட்ட பல விபத்துக்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இந்த சம்பவங்களில் சிலர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர் என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்த சம்பவங்கள் குறித்து விசாரிக்கவும், தீர்வு நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை வழங்கவும் நாங்கள் ஒரு நிபுணர் குழுவை அமைத்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com