
இந்திய நாட்டின் எல்லையை மீறி பாகிஸ்தான் எல்லையில் மீன் பிடித்ததாக கூறி சிறைப்பிடிக்கப்பட்ட 80 மீனவர்கள் விடுவிக்கப்பட்டு தீபாவளி அன்று தங்களது இருப்பிடங்களை வந்தடைந்ததனர்.
முன்னதாக பாகிஸ்தானின் கடல் எல்லையை மீறி மீன்பிடித்ததாக கூறி கராச்சியில் உள்ள சிறையில் இந்திய மீனவர்கள் பலர் கைது செய்யப்பட்டு (சுமார் 300 பேர்) அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மற்றும் வெளிநாட்டினரை வெளியேற்றும் நடவடிக்கையின் கீழ் கைது செய்யப்பட்ட மீனவர்களில் 80 பேரை அந்நாட்டு அரசு விடுதலை செய்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை அன்று விடுவிக்கப்பட்ட அவர்கள், ரயிலின் மூலமாக இந்தியா வந்தடைந்தனர். அம்மீனவர்கள் பஞ்சாப்பில் உள்ள அட்டாரி - வாகா எல்லையில் மீன்வளத்துறை குழுவிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து ஞாயிற்றுகிழமை (நேற்று) குஜராத்தில் தங்களது இல்லங்களுக்கு 3 வருடங்களுக்கு பிறகு சென்றனர்.
முன்னதாக சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் 2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் குஜராத் கடற்கரை மீன்பிடி பகுதியை தாண்டி பாகிஸ்தானின் கடல் பகுதியில் மீன் பிடித்ததாக கூறப்பட்டு அந்நாட்டு கடல் படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
விடுவிக்கப்பட்ட 80 மீனவர்களில் 59 பேர் கிர் சோம்நாத் மாவட்டத்தையும்,15 பேர் தேவபூமி துவாரகாவையும், 2 பேர் ஜாம்நகரையும், ஒருவர் அம்ரேலியையும், 3 பேர் டையூ யூனியன் பிரதேசத்தையும் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுவிக்கப்பட்ட மீனவர்களை தவிர்த்து இன்னும் 200 மீனவர்கள் அங்கு சிறையில் வாடுகின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இது குறித்து பஞ்சாப் காவல் அதிகாரி அருண் மஹால் கூறுகையில், “இந்திய உயர் ஆணையத்தின் அவசரகால போக்குவரத்து சான்றிதழ் மூலமாக தரைவழி போக்குவரத்தின் கீழ், விடுவிக்கப்பட்ட அனைத்து மீனவர்களும் வெள்ளிக்கிழமை அட்டார் வாக எல்லைக்கு தரைவழியாக கொண்டுவரப்பட்டனர். இவர்களுக்கு இந்திய மருத்துவ குழுவால் மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது” என்று தெரிவித்தார்.