வாழ்வாதாரத்திற்காக சைக்கிளில் பொரி விற்கும் 70 வயது தாத்தாவின் கதை: இணையத்தில் வைரல்
சமயங்களில் துவண்டுபோன வாழ்கையில் பலருக்கும் உத்வேகம் கொடுக்கும் விதமாக சில நம்பிக்கையூட்டும் மனிதர்கள் இருப்பதுண்டு. அப்படி ஒருவர்தான் 70 வயதான நாக்பூரை சேர்ந்த ஜெயந்தி பாய் என்ற தாத்தா. வாழ்வாதாரத்திற்காக தினமும் சைக்கிளில் சென்று மசாலா பொரி விற்கும் இவரது கதை தற்போது இணையவெளியில் வைரலாகி உள்ளது.
அவரது கதையை அபினவ் ஜெஸ்வானி என்ற பிளாகர் (Blogger) வீடியோவாக படம் பிடித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
இவர்தான் 70 வயதான ஜெயந்தி பாய். இரவு முதல் காலை வரையில் தனியார் நிறுவன காவலாளியாக பணி செய்து வருகிறார். மாலை 6 முதல் 8 மணி வரையில் மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள காந்திபாக் மற்றும் இட்வாரி பகுதியில் மசாலா பொரி விற்கிறார். அவரது ஊதியம் மிகவும் குறைவு என்பதால் மாலை நேரத்தில் பொரி விற்பனை செய்து வருகிறார். அதன் மூலம் தனது வீட்டு வாடகை மற்றும் மருத்துவ செலவுகளை சிக்கலின்றி சமாளித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ சுமார் 2 லட்சம் வியூஸ்களை கடந்துள்ளது. இதுநாள் வரையில் உள்ளூர் அளவில் அனைவருக்கும் பரிச்சயமான முகமாக இருந்து வந்த ஜெயந்தி பாய் தாத்தா, இப்போது இந்த வீடியோ மூலமாக நெட்டிசன்கள் மத்தியில் பரிச்சயமாகி உள்ளார்.

