கொரோனா உயிரிழப்பு : இந்தியாவில் 7 ஆக அதிகரிப்பு
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 400-ஐ நெருங்குகிறது.
உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,613ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் 3,261, ஸ்பெயினில் 1,756, அமெரிக்காவில் 416, ஈரானில் 1,685 பேர் இறந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97,636ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த 38 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்தார். இவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்கெனவே இருந்த நிலையில், வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர் என கூறப்படுகிறது. இதேபோல், மும்பையில், 63 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரும், குஜராத் மாநிலம் சூரத்தில் சிகிச்சை பெற்று வந்த 67 வயது முதியவரும் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
நேற்று ஒரு நாளில் மட்டும் மூவர் உயிரிழந்துள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கொரோனா தொற்றால் 396 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக, மகாராஷ்டிராவில் 74 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கேரளாவில் 64 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 29 பேரும், ராஜஸ்தானில் 28 பேரும், கர்நாடகாவில் 26 பேரும், டெல்லியில் 21 பேரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை 6 மணி வரையில், 17 ஆயிரத்து 237 பேர்களின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.