பீகார் மாநிலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் கண்டறியப்பட்டது. பின்னர் பாதிப்புகள் அறியப்பட்ட குழந்தைகளுக்கு முசாபர்பூரில் உள்ள அரசு மருத்துவமனையான ஸ்ரீகிருஷ்ணா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர்களில் 55 பேர் இதுவரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தனியார் மருத்துவமனையில் 11 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
முசாபர்பூரில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 66 குழந்தைகள், மூளைக்காய்ச்சலால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். எனவே முசாபர்பூரில் 8 வகுப்பு வரையிலான பள்ளிகள் வரும் 22-ம் தேதி வரை மூடப்படும் என்றும், மேல்நிலைப் பள்ளிகளில் காலை 10.30 மணி வரை மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இக்காய்ச்சல் பாதிப்பு அறிகுறியுடன் இருக்கும் 130 குழந்தைகளுக்கு தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு, அதிதீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த குழந்தைகளில் பெரும்பாலானோருக்கு ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைவாக இருந்ததாக, முசாபர்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதன் எதிரொலியாக, குழந்தைகளுக்கு கடும் காய்ச்சல் இருந்தால் அரசு மருத்துவமனைகளில் உடனடியாக அனுமதிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.