கொரோனா போர் முடிந்ததும் வீட்டிற்கு செல்வேன் - 42 நாட்களாக ஆம்புலன்சில் தூங்கும் ஓட்டுநர்

கொரோனா போர் முடிந்ததும் வீட்டிற்கு செல்வேன் - 42 நாட்களாக ஆம்புலன்சில் தூங்கும் ஓட்டுநர்
கொரோனா போர் முடிந்ததும் வீட்டிற்கு செல்வேன் - 42 நாட்களாக ஆம்புலன்சில் தூங்கும் ஓட்டுநர்

65 வயதான பாபு பார்த்திக்கு இந்த ரம்ஜான் வேறு விதமாக அமைந்துள்ளது. அவரது மனைவி பில்கிஸ் இஃப்தார் பண்டிகைக்கு பலகாரங்கள் செய்யவில்லை. அவரது மூன்று குழந்தைகளும் புது உடை கேட்கவில்லை. உத்தரபிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரியும் பாபு பார்த்தி, கடந்த 42 நாட்களாக தனது குடும்பத்தை பார்க்கவில்லை.

மார்ச் 23 முதல் அவர் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் ஹாட்ஸ்பாட் இடங்களில் ஆம்புலன்ஸில் வலம் வந்து அவசர உதவி செய்து கொண்டிருக்கிறார். மேலும் ஆம்புலன்ஸையே தனது வீடாகவும் மாற்றியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் ஆம்புலன்ஸில் தான் தூங்குகிறேன். வயலில் இருக்கும் மோட்டார் பம்பில் குளித்துக்கொள்வேன். எனது உணவுக்கான ஏற்பாடுகள் நான் பணிபுரியும் மருத்துவமனையால் செய்யப்படுகின்றன. கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் நாங்கள் வென்றவுடன் மட்டுமே வீட்டிற்கு செல்ல முடிவு செய்துள்ளேன். நான் பாதுகாப்பாக இருக்கிறேன் என்று உறுதியளிக்க எனது குடும்பத்தினருடன் தினமும் காலையில் பேசுகிறேன். இங்கு பணி செய்ய வேண்டிய கடமை இருப்பதால் என்னால் திரும்பிச் செல்ல முடியாது. நோய்த்தொற்று விகிதங்கள் உச்சத்தில் இருப்பதால், சந்தேகத்திற்குரிய நோயாளிகளை பரிசோதனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் சேவைகள் முன்னெப்போதையும் விட அதிகமாக தேவைப்படுகின்றன.” எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து மருத்துவர் நீரஜ் சர்மா கூறுகையில், “கொரோனா வைரஸ் தொடங்கியதில் இருந்து பார்த்தி எங்கள் அணியின் ஒரு அங்கமாக இருக்கிறார். கிட்டத்தட்ட 1,100 நோயாளிகளை மாவட்ட மருத்துவமனையில் கொரோனா சோதனைகளுக்காக அழைத்து வந்துள்ளோம். அவர்களில் குறைந்தது 700 பேராவது பாரதியால் அழைத்து வரப்பட்டவர்கள்தான். அவரது அர்ப்பணிப்பு இணையற்றது. இரவு பகல் பாராமல் எப்போதும் ஆம்புலன்ஸை தயார் நிலையில் வைத்திருப்பார். மருத்துவமனையில் இருந்து 9 கி.மீ தூரத்தில் உள்ள மண்டி கிஷான் தாஸ் சரை என்ற கிராமத்தில்தான் பார்த்தி வீடு உள்ளது. இந்த ரம்ஜானுக்கு வீட்டிற்கு செல்லுமாறு பார்த்தியிடம் கூறப்பட்டது. ஆனால் பச்சை மண்டலத்தின் கீழ் மாவட்டம் பட்டியலிடப்படும்வரை செல்லமாட்டேன் என மறுத்துவிட்டார். ” எனத் தெரிவித்தார்.

சம்பல் மாவட்டம் தற்போது ஆரஞ்சு மண்டலத்தில் உள்ளது. சம்பல் மாவட்டத்தில் இதுவரை 19 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர்.

பார்த்தி மாவட்ட மருத்துவமனையில் 17 ஆயிரம் சம்பளத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார். கொரோனா வைரஸ் வயதானவர்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை 65 வயதான பார்த்தி அறிவார். ஆனால் அவரின் வயது அவரை பயமுறுத்துவதில்லை.

இதுகுறித்து பார்த்தி கூறுகையில், “நான் எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக்கொள்கிறேன்.சந்தேகத்திற்கிடமான ஒரு நோயாளியை நான் அழைத்து வரும்போதெல்லாம் ஆம்புலன்ஸை சுத்தப்படுத்துகிறேன். வாகனத்தில் ஏறுவதற்கு முன்பு மருத்துவ ஊழியர்கள் சானிடைசரைப் பயன்படுத்துவதை உறுதிசெய்கிறேன்” எனத் தெரிவிக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com