611 அரசுப் பள்ளிகளுக்கு No கட்டடங்கள்.. மாட்டுத் தொழுவத்தில் வகுப்புகள்?
ராஜஸ்தானில் அரசுப் பள்ளிகளின் மோசமான நிலை தொடர்பாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநிலத்தில் உள்ள 10 பெண்கள் பள்ளிகள் உட்பட 611 அரசுப் பள்ளிகளுக்குக் கட்டடங்கள் இல்லை. மேலும், மாட்டுத் தொழுவம் போன்ற தற்காலிக கொட்டகையில் மாணவர்கள் பாடம் படிப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானில் அரசுப் பள்ளிகளின் நிலை
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே பக்ரு பகுதியில் உள்ள அரசுப் பள்ளியின் பழைய கட்டடம் பாதுகாப்பற்றது என கடந்த ஆண்டு மூடப்பட்டது. அதன்பின் மாணவர்கள் மாட்டுத் தொழுவம் போன்ற தற்காலிக கொட்டகையில் பாடம் பயின்று வருவதாக புகார் எழுந்தது. எருமைகள் அடைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு அருகிலேயே குழந்தைகள் அமரவைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதை விசாரிக்கச் சென்ற 'காக்ரோச் ஜனதா பார்ட்டி' குழுவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இச்சம்பவம் மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கிடையே, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் டீக்காராம் ஜூலியின் கேள்விக்கு அரசு அளித்த பதிலில், மாநிலம் முழுவதும் 611 அரசுப் பள்ளிகளுக்கு சொந்தக் கட்டடமே இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதில் 10 பெண்கள் பள்ளிகளும் அடங்கும். 2025–26ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த மாவட்டக் கல்வித் தகவல் அமைப்பின் (UDISE)தரவுகளின்படி இந்த விவரம் வெளியாகியுள்ளது.
கட்டடங்களே இல்லாத அரசுப் பள்ளிகள்
மேலும்,
* ஜெய்ப்பூரில் மட்டும் 38 பள்ளிகளுக்குக் கட்டடங்களே இல்லை
* ஜலாவாரின் அக்லேராவில் 23 பள்ளிகளுக்கு கட்டங்கள் இல்லை
* கான்பூரில் 16 பள்ளிகள்
* ஜல்ராபட்டனில் 11 பள்ளிகள்
* பலோடியில் உள்ள பாப் பகுதியில் 11 பள்ளிகள்
* பன்ஸ்வாராவில் உள்ள சோட்டிசர்வனிலும் 10 பள்ளிகள்
அடிப்படை வசதிகள் இல்லை
இவை தவிர,
* கட்டடம் உள்ள 64,484 பள்ளிகளில் அடிப்படை வசதி இல்லை
* 2,047 பள்ளிகளில் கழிப்பறை இல்லை
* 1,049 பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லை
* 83,783 வகுப்பறைகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன
* 3,768 பள்ளிகள் முற்றிலும் பாதுகாப்பற்றவை
இருப்பினும்,
கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு
இந்தக் கட்டடங்களைப் பழுதுபார்க்கவும் புதிய கட்டடங்களையும் கட்டவும் அரசு நிதி ஒதுக்கியுள்ளது. அதன்படி,
* பழைய கட்டடங்களைப் பழுதுபார்க்க ரூ.550 கோடி
* புதிய கட்டடங்களுக்கு ரூ.450 கோடி
* மேலும் அடுத்த 5 ஆண்டுகளில் பல்வேறு நிதிகள் மூலம் ரூ.12,500 கோடி ஒதுக்கப்படும்
குற்றஞ்சாட்டிய எதிர்க்கட்சி; பதிலடி கொடுத்த பாஜக அரசு!
ஆனால், அரசின் இந்த நிலைப்பாட்டை எதிர்க்கட்சித் தலைவர் டீக்காராம் ஜூலி நிராகரித்துள்ளார். “அரசிடம் எந்தத் திட்டமும் இல்லை" என்று கூறியுள்ள ஜூலி, பள்ளிகளின் மோசமான நிலை காரணமாக அவை மூடப்பட்டதாகவும் அல்லது வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டதாகவும், இது மாணவர் சேர்க்கையைப் பாதித்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். ”அரசுப் பள்ளிகளின் இந்த மோசமான நிலைக்குக் காரணமே கடந்தகால அரசுதான் என பாஜக பதிலடி கொடுத்துள்ள நிலையில், பள்ளிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதே தங்களின் முன்னுரிமை எனவும் உறுதியளித்துள்ளது.

