அயோத்தி ராமர் கோயில் பிரசாதம் எனக்கூறி 6 லட்சம் பேரிடம் பல கோடிகள் மோசடி! வெளிவந்த உண்மை!
அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலையின் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சி கடந்தாண்டு ஜனவரி 22-ம் தேதி பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெற்றது. இந்நிலையில், பிராண பிரதிஷ்டைக்கு பிறகு சுவாமி பிரசாதம் கிடைக்கவில்லை என அயோத்தி காவல் நிலையங்களுக்கு புகார்கள் வரத் தொடங்கின. அந்த புகார்கள் மாநில சைபர் கிரைம் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன. சைபர் கிரைம் பிரிவு நடத்திய விசாரணையில் பல லட்சம் பேரிடம் பல கோடிகளை மோசடி மன்னன் ஒருவர் ஏமாற்றி இருப்பது தெரியவந்துள்ளது.
ராமர் கோயில் பிரசாதத்தை வீட்டிற்கே வந்து வழங்குவதாக கூறி, போலி வலைதளத்தை உருவாக்கி லட்சணக்கனக்கான பக்தர்களை ஏமாற்றியுள்ளனர் அந்த மோசடி நபர். இந்த மோசடியில் காசியாபாத், இந்திராபுரத்தில் உள்ள வின்ட்சர் பூங்காவைச் சேர்ந்தவரும், தற்போது அமெரிக்காவில் வசிக்கும்வருமான ஆஷிஷ் சிங்தான் மூளையாக செயல்பட்டார் என்று தெரியவந்தது . 2024 கும்பாபிஷேக விழாவிற்கு சில வாரங்களுக்கு முன்பு, khadiorganic.com என்ற போலி போர்ட்டலைத் தொடங்கி, டிசம்பர் 19, 2023 முதல் ஜனவரி 12, 2024 வரை 6.3 லட்சத்திற்கும் அதிகமான உள்நாட்டு மற்றும் சர்வதேச பக்தர்களிடமிருந்து பிரசாத ஆர்டர்களை எடுத்திருக்கிறார்.
ராமர் கோயில் பிரசாதம் பெற இந்தியாவில் ரூ.51 எனவும், வெளிநாட்டவர்களுக்கு 11 டாலர் எனவும் கட்டணம் நிர்ணயித்துள்ளார். அந்தவகையில், 3 கோடியே 85 லட்சம் ரூபாயை, 6 லட்சத்து 30,695 பக்தர்களிடம் ஏமாற்றி வசூல் செய்துள்ளார்.
இதையடுத்து ஆசிஷை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், மீதமுள்ள 1 கோடியே 70 லட்சத்து 47,313 ரூபாயையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவர்மீது, ஐபிசி பிரிவு 420, ஐடி சட்டம் பிரிவு 66D மற்றும் பாஸ்போர்ட் சட்டம், 1967 இன் பிரிவு 12(3) ஆகியவற்றின் கீழ் ஒரு கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவரிடமிருந்த ஒரு மடிக்கணினி, இரண்டு ஐபோன்கள், ரூ.13,970 ரொக்கம், 16 அமெரிக்க டாலர்கள் மற்றும் அமெரிக்க மற்றும் இந்திய அடையாள அட்டைகள், டெபிட் கார்டுகள், வாஷிங்டனில் உள்ள ஓட்டுநர் உரிமம் மற்றும் ஒரு சுகாதார அட்டை உள்ளிட்ட ஏராளமான அடையாள மற்றும் வங்கி ஆவணங்களை போலீசார் கைப்பற்றியிருக்கின்றனர்.
தற்போது அயோத்தி ராமர் கோயில் வளாகத்தில், சன்னதிகளுக்கும் பிராண பிரதிஷ்டை நடைபெற்றுள்ளது. அதனால் போலி இணையதளங்கள் பெருகும் அபாயம் உள்ளதாக போலீஸார் எச்சரித்துள்ளனர்.