உ.பி. | கோயிலுக்குள் 5 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. வைரலான அதிர்ச்சி வீடியோ!
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிராக வன்முறைகளும், பாலியல் சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகின்றன. அதில் பாலியல் வன்புணர்வு சம்பவங்களில் ஒன்றுமறியா பெண் சிசுக்களும் பாதிக்கப்படுகின்றன. அதுபோன்ற சம்பவம்தான் தற்போது உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. அதுவும், ஒரு கோயிலுக்குள்ளேயே அரங்கேறி இருப்பதும் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதும் கொடுமையின் உச்சமாக இருக்கிறது.
இந்தச் சம்பவம் மே 18ஆம் தேதி நடந்ததாகக் கூறப்படுகிறது. கோயிலுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, அந்த நபர் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, அவரது குடும்பத்தினர் கோயிலுக்குள் சென்றுள்ளனர். அவர்கள் வருவதைப் பார்த்த அந்த நபர் ஓடிவிட்டார்.
இதுகுறித்து அவர்கள் காவல் துறையினருக்குப் புகார் அளித்தனர். அதன்பேரில் விசாரணை நடத்தியதில், அவர் அந்தச் சிறுமியின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த பவித்ரா எனத் தெரிய வந்ததது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸார், அவர் மனநிலை சரியில்லாதவர் என்ற அடிப்படையில் விடுவித்துள்ளனர்.
ஆனால் அவரது கொடூரமான செயலின் வீடியோ வைரலானதை அடுத்து அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர், மருந்துக் கடை ஒன்றில் பணிபுரிகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது குடும்பத்தினர் அவருக்கு மனநலப் பிரச்னைகள் இருப்பதாக தவறான அறிக்கைகளை வழங்கியதாக போலீஸார் தெரிவித்தனர். இதற்கிடையே, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.