ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து வழக்கு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்
ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் பிரிவு 370 ஐ ரத்து செய்ததற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்விலிருந்து 5 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஜம்மு காஷ்மீருக்கு சீதாராம் யெச்சூரி செல்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்திய குடிமக்கள், நாட்டின் எந்தப் பகுதிக்கு செல்லவேண்டும் என்றாலும் வழிவகை செய்வது அரசின் கடமை எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உறவினர்கள், நண்பர்களை மட்டும்தான் சந்திக்க வேண்டும் எனவும் அரசியல் நோக்கத்திற்காக யாரும் காஷ்மீர் செல்லக்கூடாது எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. முகமது ஜலீல் உள்ளிட்டோரும் தங்களது குடும்பத்தினரை பார்க்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனிடையே ஜம்மு- காஷ்மீரில் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது பற்றி 7 நாட்களில் பதில் தர மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.