அசாம்|வீட்டிற்குள்ளேயே 5 அடி குழி... கணவனை கொன்று புதைத்து ஒன்றும் தெரியாதது போல நாடகமாடிய பெண்!
அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சபியல் ரஹ்மான். இவரது மனைவி ரஹிமா கதுன். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. திருமணமாகி 15 வருடங்கள் ஆன நிலையில், இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது . அப்படி ஒரு நாள் குடிபோதையில் அவரது கணவர் சண்டையிட இருவருக்கும் இடையே சண்டை முற்றியுள்ளது. இதனால், இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ள இறுதியில் தனது கணவர் ரஹ்மானை ரஹிமா கொலை செய்துவிடுகிறார்.
தனது கணவரை கொலை செய்தததை மறைக்க நாடகமாடிய கதுன், தனது கணவர் வேலைக்காக கேரளா சென்றிருக்கிறார் என்றெல்லாம் சொல்லி சமாளித்துள்ளார். ஆனால், இவரது மகனுக்கு சந்தேகம் எழுவதை அறிந்துகொண்ட ரஹிமான், உடல்நிலை சரியில்லை என்று கூறி மருத்துவமனிக்குச் செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இந்நிலையில், இறந்த ரஹ்மானின் சகோதரர் ஜூலை 12 ஆம் தேதி ரஹிமா காணாமல் போனது குறித்து போலீஸிடம் புகார் அளித்துள்ளார்.
போலீஸாரும் அவரை தேட ஆரம்பித்துள்ளனர். இந்தநிலையில், ஜூலை 13 அன்று, ரஹிமா கதுன், குவஹாத்தியில் உள்ள ஜலுக்பாரி காவல் நிலையத்தில் சரணடைந்து, தனது கணவர் இறந்துவிட்டதாகக் கூறினார்.
ஆனால், போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் குடும்ப தகராறில் தனது கணவரைக் கொன்றுவிட்டதாக ஒப்புக்கொண்டார்.
மேலும், அவர் இறந்த உடலை எங்கு மறைத்தார் என்பது குறித்து காவல்துறையினர் அளித்த தகவல்கள்தான் அதிர்ச்சியை அதிகரிக்க செய்துள்ளது.
அதில், “ ஜூன் 26 அன்று இரவு அவர்களுக்கு இடையே ஏற்பட்ட பெரும் சண்டைக்குப் பிறகு தனது கணவரைக் கொன்றதாக அவர் ஒப்புக்கொண்டார். இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அன்று இரவு இந்த சண்டை வெடித்தபோது அவரது கணவர் குடிபோதையில் இருந்துள்ளார்.
இந்த சண்டையில், அவரது மனைவியால் பலத்த காயமடைந்த அவரது கணவர் இறந்துள்ளார். கணவரை இறந்ததை மறைப்பதற்காக ஐந்து அடியில் தனது வீட்டில் குழியை தோண்டி உடலை அதில் புதைத்து மண்ணால் மூடி மறைத்துள்ளார்.
அவரது கணவரின் சிதைந்த உடலை நாங்கள் தோண்டி எடுத்தோம். ஒரு பெண் மட்டும் இவ்வளவு பெரிய குழி தோண்டி உடலைக் கொட்டுவது சாத்தியமில்லை. இதில், மேலும் சிலர் ஈடுபட்டிருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். மேலும் சில சந்தேக நபர்களைத் தேடி வருகிறோம். " என்று தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.