ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் 4 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ஆம் தேதி மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இந்த கொடூரத் தாக்குதலில் 40 வீரர்கள் உயிர்த் தியாகம் செய்தனர். இந்த தாக்குதலுக்கு பிரதமர், முதலமைச்சர்கள், எதிர்கட்சித்தலைவர்கள், நடிகர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீதான தாக்குதலின் ஈரம் காயாத நிலையில், காஷ்மீரில் நேற்று நடத்தப்பட்ட மற்றொரு வெடிகுண்டு தாக்குதலில் ராணுவ மேஜர் ஒருவர் உயிரிழந்தார். காஷ்மீர் மாநிலம் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் உள்ள நவ்ஷெரா பகுதியில் இந்திய பாதுகாப்புப்படை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது புதிதாக தோண்டப்பட்டிருந்த ஒரு குழியில் சோதனை செய்தபோது, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் ராணுவ மேஜர் சித்ரேஷ் சிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்நிலையில் இன்று பயங்ரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் மேலும் 4 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள பிங்லான் பகுதியில் பயங்கரவாதிகள் மறைந்து இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து ராணுவத்தினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்கும்போது ராணுவத்தினருக்கும்- பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் ராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர். இதில் ஒருவர் ராணுவ மேஜர் ஆவார். அத்துடன் மேலும் ஒரு ராணுவ வீரரும் காயம் அடைந்துள்ளார். தொடர்ந்து தீவிரவாதிகளை தேடும்பணி நடைபெற்று வருகிறது.