கேரளாவில் 3-வது நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!
கொரோனா வைரஸ் சீனாவையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது. நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதுவரை கொரோனா வைரஸுக்கு சீனாவில் 361 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸின் பாதிப்பு இந்தியாவுக்குள்ளும் நுழைந்தது. சீனாவிலிருந்து கேரளா திரும்பிய மாணவிக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கொரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளான மாணவி தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.
நேற்று கேரளாவில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. சீனாவில் இருந்து கேரளா வந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கேரளாவின் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனோ வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட நபர் சீனாவில் இருந்து நாடு திரும்பியவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளானர் கஞ்சன்காடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல் தற்போது சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கேரளாவில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மூவருக்கும் அம்மாநில அரசு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது.