பஞ்சாப்பில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றால் 300 யூனிட் இலவச மின்சாரம்: அரவிந்த் கெஜ்ரிவால்

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றால் 300 யூனிட் இலவச மின்சாரம்: அரவிந்த் கெஜ்ரிவால்
பஞ்சாப்பில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றால் 300 யூனிட் இலவச மின்சாரம்: அரவிந்த் கெஜ்ரிவால்

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றால் அனைத்து குடும்பத்திற்கும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியைத் தொடர்ந்து அண்டை மாநிலமான பஞ்சாபிலும் ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி வியூகம் வகுத்து வருகிறது. அங்கு தற்போது, காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. கேப்டன் அமரீந்தர் சிங் முதல்வராக இருக்கிறார். விரைவில் அம்மாநிலம் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கவுள்ளது.

பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில், சண்டிகர் பிரஸ் கிளப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், “பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றால், மின்சார பில் தள்ளுபடி வாக்குறுதி உடனடியாக நிறைவேற்றப்படும். ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். இதைச் செய்வதன் மூலம், பஞ்சாபில் சுமார் 77 சதவீதம் முதல் 80 சதவீதம் பேர் பூஜ்ஜிய மின்சார பில் பெறுவார்கள். பழைய மின்சார பில் கட்டத்தேவையில்லை.

தங்களது வருமானத்தில் பாதியளவு மின்சார கட்டணத்திற்கே செல்வாகிறது என சில பெண்கள் கூறுகின்றனர். அவர்களால் எப்படி சமாளிக்க முடியும்? வீட்டில் ஒரு மின்விசிறி, இரண்டு லைட் மட்டுமே வைத்திருப்பவர்களுக்கு மாதம் ரூ.50,000 மின் கட்டணம் வருகிறது. இது எப்படி சாத்தியமாகும். இது தவறு. இந்த தவற்றுக்கு ஆம் ஆத்மி ஆட்சி அமைந்தவுடன் முற்றுப்புள்ளி வைக்கப்படும். அதுமட்டுமல்ல பழைய மின் கட்டண அரியர்ஸை யாருமே கட்டத் தேவையிருக்காது.

நாட்டிலேயே மின்சார செல்வு டெல்லியில்தான் மிகக்குறைவு. இதை எப்படி செய்ய முடிகிறது. பஞ்சாப்பிலும் ஏன் இதை செய்யக்கூடாது?” எனக் கேள்வி எழுப்பினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com