சென்னையை சேர்ந்த 30 பெண்கள் நாளை சபரிமலையில் தரிசனம் செய்ய திட்டம் !
சென்னையை சேர்ந்த 30 பெண்கள் சபரிமலைக்கு செல்ல உள்ளனர்.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பை அடுத்து சில பெண்கள் சபரிமலைக்கு செல்ல முயன்றனர். பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக அவர்கள் உள்ளே நுழைய முடியாமல் திரும்பிவிட்டனர். சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் நுழைவதற்கு கேரள பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியதோடு, கேரள சட்டசபையையும் முடக்கி வருகின்றனர். இதனிடையே சபரிமலை கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதனால் சிரமங்களை அனுபவிக்க நேர்வதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் சென்னையை சேர்ந்த 30 பெண்கள் சபரிமலைக்கு செல்ல உள்ளனர். ‘மனிதி’ அமைப்பை சேர்ந்த அவர்கள் நாளை கோட்டயத்தை அடைய உள்ளனர். அதன்பின் அங்கிருந்து சபரிமலைக்கு செல்ல உள்ளனர். முன்னதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் அவர்கள் இ-மெயில் வழியாக உரையாடல் நடத்தியதாக தெரிகிறது. அத்துடன் கோயிலுக்கு இந்த நாளில் செல்லலாம் என கேரள போலீசார் அவர்களுடன் தொலைபேசியில் பேசியதாக தெரிகிறது. அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை கேரள போலீசார் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
வழக்கமாக ஐயப்ப பக்தர்கள் கோயிலுக்கு செல்லும் முன் கடைபிடிக்கும் அனைத்து விரதங்களையும் முறைப்படி இவர்கள் கடைபிடித்துள்ளனர். அத்துடன் இவர்கள் கோயிலுக்கு செல்ல அவர்களின் குடும்பத்தினரும் முழு ஆதரவு தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததற்கு பின்பும் இன்னும் 10 முதல் 50 வயதிலான பெண்கள் சபரிமலைக்கு கோயிலுக்கு செல்லவில்லை என்றே கூறப்படுகிறது.