உத்தரப் பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள சென்ற 3 பெண்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சரோஜ் (70), அனார்களி (72), சத்யவதி (60). இவர்கள் அதேபகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வியாழக்கிழமை சென்றுள்ளனர். அங்கு அவர்கள் மூவருக்கும், கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக, வெறிநாய் கடிக்கான, ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் ஜஸ்ஜித் கவுர் கூறுகையில், “சுகாதார மையத்தின் முதல் தளத்தில், கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இவர்கள் மூவரும் அங்கு செல்லாமல், மற்றொரு பிரிவுக்குச் சென்றுள்னர். அங்கிருந்த மருந்தாளுனர், அவசர வேலையாக வெளியே புறப்பட்டுள்ளார். அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துமாறு மற்றொரு நபரிடம் கூறியுள்ளார். அந்த நபர் தவறுதலாக, ரேபிஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளார். தவறுக்கு காரணமானவரை சஸ்பெண்ட் செய்யும்படி, தலைமை சுகாதார அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முறைகேடு குறித்து, விரிவான விசாரணை நடக்கிறது. அதுதொடர்பான அறிக்கை கிடைத்ததும், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அனார்களி கூறுகையில், “வீடு திரும்பிய பிறகு எனக்கு மயக்கம் ஏற்பட்டது. எனது ஆதார் அட்டை என்னிடம் கேட்கப்படாதபோது மருத்துவமனையிலேயே எனக்கு சந்தேகம் இருந்தது” என்றார்.
இதுகுறித்து சத்யவதி கூறுகையில், “அவர்கள் எனக்கு என்ன ஊசி கொடுத்தார்கள் என்று கேட்டேன். அது ஒரு ரேபிஸ் தடுப்பூசி என்று அந்த நபர் என்னிடம் கூறினார். அதற்கு முன்னர் நான் இங்கே தடுப்பூசிகள் போடுகிறீர்களா என்று கவுண்டரில் இருந்தவரிடம் கேட்டேன். அதற்கு அவர் ஆம். ஒரு 10 ரூபாய் சிரஞ்சை வாங்கி வாருங்கள், நான் தடுப்பூசியை போடுகிறேன் என்றார்.” எனத் தெரிவித்தார்.